உயர்தரம் சித்திபெறா விட்டாலும் உயர்கல்வி இல்லாவிட்டாலும் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு புத்தகங்கள் வாசித்து படித்துக் கொள்ள முடியும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி சம்பிரதாயம் பொருளாதார தத்துவம் தொடர்பில் சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்பில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிபி.ஜயசுந்தர ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க பிபி.ஜயசுந்தரவை பாராட்டிப் பேசுவதால் அவரது அமைச்சரவை பத்திரங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கப்படுவதாகவும் விமல் வீரவன்ச நேற்று (12) ரிவி தெரணவில் ஔிபரப்பான ´360´ அரசியல் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் விமலின் இந்த கருத்திற்கு எஸ்.பி.திஸாநாயக்க இன்று பதிலளித்தார்.
அமைச்சர் விமல் வீரவன்சவால் ´ஜய வேவா´ மாத்திரமே சொல்ல முடியும் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
அமைச்சு செயலாளர் என்பது சாதாரண பதவி அல்ல எனவும் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் அதில் இருப்பதாகவும் அவர்களுக்கு நிறைவேற்று அதிகாரம் அளிக்கப்படுவதாகவும் எஸ்.பி. சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மற்றும் செயலாளருக்கு இடையில் காணப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் திட்டங்கள் செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ஒருவர் சட்டவிரோத செயலுக்கு அனுமதி கோரினால் அதனை நிராகரித்து விளக்கம் அளிக்கும் அதிகாரம் அமைச்சு செயலாளர்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பிபி.ஜயசுந்தர என்பவர் பொருளாதார நிபுணத்துவம் பெற்ற, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றச் செயற்படும் நபர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிபி.ஜயசுந்தர என்பவர் இலங்கையின் பொருளாதார கொலையாளி எனவும் அவர் சந்திரிக்கா ஆட்சியில் அரச நிறுவனங்களை விற்றவர் எனவும் சிறையில் இருக்க வேண்டியவர் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















