ஊடகச் சுதந்திரம் துளியும் இல்லை இணையத் தடைக்கு ஐ.தே.க. கண்டனம்

unp2ஜனநாயகத்தை நிலைநிறுத்த தாம் தயாரில்லை என்பதை இணையத் தளங்களைத் தடைசெய்து மஹிந்த அரசு மீண்டும் நிரூபித்துள்ளது. மக்களுக்கு அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவலறியும் சுதந்திரத்தை எள்ளளவும் கருத்திற்கொள்ளாது அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதுடன் இணையத் தளங்கள் மீதான தடையை அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது இணையத்தளங்கள் மீதான தடை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு லங்கா நியூஸ் வெப், லங்கா ஈ நியூஸ், லங்கா கார்டியன், கொழும்பு டெலிகிராப், ஸ்ரீ லங்கன் மிரர் முதலான 5 பிரசித்தமான இணையத் தளங்களையே அரசு தடை செய்துள்ளது
.
தமது ஊழல், மோசடிகள் நாட்டு மக்களுக்குத் தெரியக் கூடாது என்பதில் அரசு மிகவும் அவதானத்துடன் இருக்கின்றது. அதனால் தான் இந்த இணையத் தளங்களை அரசு தடைசெய்துள்ளது.

ஊடகங்களின் தோழன் எனத் தம்மை அடையாளங்காட்டிக் கொள்ளும் இந்த அரசு, தகவலறியும் உரிமையைப் பறித்தெடுப்பது இது முதற்தடவையல்ல. அரசு, ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. தமக்குச் சார்பான ஊடகங்களை வைத்துக்கொண்டு அரசு ஏனைய தரப்பினருக்கு சேறு பூசினாலும், உண்மைக்கும், மக்களின் கருத்துக்கும் அது அச்சம் கொண்டிருப்பதால், தம்மை கேள்விக்குட்படுத்தும் ஊடகங்களை தண்டிக்கின்றது.

எனவே, மேற்குறிப்பிட்ட 5 இணையத்தளங்கள் மீதான தடையை உடனடியாக நீக்கி, மக்களுக்கு இருக்கும் தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறானதொரு நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் நாம், இந்தத் தடையை அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply