நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை மஹிந்த ஏன் ஆரம்பிக்கக்கூடாது? கேள்வி எழுப்புகின்றார் எரிக் சொல்யஹய்ம்

Erik-Solheimஇலங்கையில் நல்லிணக்க முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே முதலில் ஆரம்பிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஏற்பாட்டாளராகச் செயற்பட்ட எரிக் சொல்யஹய்ம்.

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகளின் போது ஏற்பாட்டாளராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்யஹய்ம், அண்மையில் இலங்கை அரசால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் பெறுகின்றனர் என்று தெரிவித்து புலம்பெயர் அமைப்புகள் மீது விதித்துள்ள தடைதொடர்பாகத் தனது டுவீற்றர் பக்கத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் அமைப்புகள் மற்றும், தனி நபர்களைத் தடை செய்யும் நடவடிக்கை வெற்றிகரமான நல்லிணக்க முயற்சிகளுக்கு ஏற்றதல்ல என்று பிரிட்டன் வெளிவிவகார இணையமைச்சர் ஹியூகோ ஸுவையர் தெரிவித்துள்ள கருத்தைச் சுட்டிக்காட்டி, தாமும் அதனுடன் உடன்படுவதாகவும் சொல்யஹய்ம் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் டுவீற்றர் கருத்தாடலின் போது, அமால் அபேவர்த்தன என்பவர் எந்தவொரு புலம்பெயர் தமிழ் அமைப்பாவது நல்லிணக்கத்தை விரும்புகிறது என்பதற்கு ஆதாரமுள்ளதா? என்று எரிக் சொல்யஹய்மிடம் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்துள்ள எரிக் சொல்யஹய்ம், எல்லாத் தமிழர்களும் நல்லிணக்கத்தை விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன், பலமாக உள்ள தரப்பு முதலில் கைநீட்ட வேண்டும். ஏன் மஹிந்த ராஜபக்­ச அதனை ஆரம்பித்து வைக்கக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் பதிவிட்டுள்ள மற்றுமொருவர், புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளஉருவாக்குகின்றன என்று தெரிவித்துள்ளதற்கு, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்யஹய்ம் பதிலளித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஜனநாயகத்தை மீளநிலைப்படுத்துவதும், தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது டுவீற்றர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply