யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூர்ந்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதில் எந்தவித தடையும் கிடையாது. மாறாக புலிக் கொடியை வைத்துக் கொண்டு கூட்டமாக நினைவு கூருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர், பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடிகளை பயன்படுத்தி நினைவு கூரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோத செயலாகும், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பார்கள்.
பயங்கரவாதம் எந்தவிதத்தில் வந்தாலும் அது பயங்கரவாதம் தான் அதற்கு எந்தவகையிலும் அனுமதியளிக்க முடியாது யுத்த காலத்தில் உயிரிழந்த அனைவரும் ஒரே நாளில் உயிரிழந்த வர்கள் அல்ல.
எனினும் சிலர் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் 18 ஆம் திகதி அனுஷ்டிக்க முயற்சிக்கின்றனர் அதே போன்று 18 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற வெற்றி விழா அணிவகுப்பானது இராணுவ வெற்றிக்கான கொண்டாட்டமும் அல்ல, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை வெற்றி கொண்டமைக்கான கொண்டாட்டமும் அல்ல.
மாறாக வடக்கு, கிழக்கு உட்பட இந்த நாட்டில் அச்சத்திற்கு மத்தியில் வாழ்ந்துவந்த மக்களுக்குகிடைத்த வெற்றிக் கொண்டாட்டமாகும்.
இதனை வைத்துக் கொண்டு அரசியல் இலாபத்தை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்க சிலர் முயற்சிக்கின்றனர் வருடாந்தம் இடம்பெற்று வரும் வெற்றி விழா அணிவகுப்புக்கான அழைப்பிதழ்கள் பாதுகாப்புச் செயலாளரினாலேயே வழங்கப்படுகிறது.
இது அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுப்பது எமது பொறுப்பு அதில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட விருப்பமாகும்.
மாறாக இதில் எந்த பலாத்காரமும் கிடையாது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதை விரும்பாதவர்களே தமது குறுகிய அரசியல் இலாபம் கருதி முரண்பாடுகளை தோற்றுவிக்க முயல்கின்றனர் என்றார்.
















