இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்குப் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்கவே நேற்றுப் பிற்பகல் மகிந்த ராஜபக்ச சீனா சென்றுள்ளார்.
ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல் அமைப்பில், 23 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த அமைப்பில் இலங்கையும், பார்வையாளர் நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உள்ளிட். பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இங்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும், இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதமே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வரவுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா செல்வது குறித்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு அவர், இந்தியாவுக்குப் பயந்து கொண்டு அவர் சீனாவுக்கு செல்லவில்லை என்றும், இது முன்கூட்டியே திட்டமிட்ட பயணம் என்பதால், அங்கு செல்லாவிட்டால் சீனா கொபித்துக் கொள்ளும் என்றும் கெஹலிய ரம்புக்வெல பதிலளித்துள்ளார்.
















