சோமாலியா நாட்டில் பாராளுமன்றம் கூடி எம்.பி.க்கள் விவாதங்களில் கலந்துகொண்டிருந்தபோது, அக்கட்டிடத்தை திடீரென தீவிரவாதிகள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பெரும் பதட்டம் நிலவியது.
நேற்று சோமாலிய பாராளுமன்றம் கூடிய சிறிது நேரத்தில் அல்-ஷஹாப் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் திடீரென வெடிகுண்டுகளை எறிந்தும், துப்பாக்கியால் சுட்டும் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி சென்றனர். பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பி சுட்டனர். இந்த கடும் சண்டையில் தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இரண்டு சோமாலிய பாதுகாப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு எம்.பிக்களுக்கும் குண்டுகாயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் சோமாலியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக பாராளுமன்ற வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் அப்டிவெலி சேக் அகமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்றும், தீவிரவாதிகளை ஒடுக்க இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
















