வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை சிறந்த முறையில் கண்காணிப்பதற்கு ஓர் பொறிமுறைமையை உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெளிநாட்டுப் பணியாளர்களின்; மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி பிரான்கோயிஸ் கிரிபியாயு (François Crépeau) தெரிவித்துள்ளார்.
தொழில் வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள், துணை முகவர்கள் போன்றவர்கள் தொடர்பில் தெளிவான கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசிமாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 1.8 மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். உரிய வசதிகளின்றி உரிய சம்பளம் வழங்காது வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் பணியாளர்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய திட்டங்களை இலங்கை அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வெளிநாடுகளில் இலங்கைப் பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
















