கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லையே: சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ்!

smriti-iraniமத்திய கல்வித்துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்காதவர் என்று காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் ட்விட்டரில் பதிவு போட்டு புதிய சர்ச்சையை உருவாக்கிவிட்டிருக்கிறார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஸ்மிரிதி இரானி. இவர் மத்திய கல்வி மற்றும் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார்.

இவர் குறித்து தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜய் மக்கான், கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இரானி பட்டதாரி கிடையாது என்பது தேர்தலின் போது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

பாஜக, ஒமர் அப்துல்லா கண்டனம்

இதற்கு பா.ஜ.க உடனடியாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இரானியை பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது துரதிருஷ்டவசமானது என கூறியுள்ள மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுவார் என்று தெரிவித்தார். மக்கானின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரான உமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சராக உள்ளவர் கற்றிருக்கவேண்டும் என்றால், விமான போக்குவரத்து துறையை கவனிப்பவர் விமானியாக இருக்கவேண்டும் என மக்கான் கூறுவாரா என கேள்வியெழுப்பினார். இது முற்றிலும் முட்டாள்தனமான கருத்து என உமர் பதில் ட்விட் செய்துள்ளார்.

இரானியை பற்றி கவர்ச்சியானவர் மற்றும் மேல் தட்டு சமூகத்தை சேர்ந்தவர் என வரம்பு மீறி டுவிட் செய்துள்ள மக்கானுக்கு ட்விட்டரிலேயே மேலும் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கே செல்லாத ரவீந்திரநாத் தாகூர் தான் கல்வி நிறுவனங்களை நிறுவி, கல்வியின் மகத்துவம் பற்றிய பார்வையை உலகிற்கு உணர்த்தினார் என அரசியல் விமர்சகரான ஸ்வப்பன் தாஸ் குப்தா ட்விட் செய்துள்ளளார்.

Tags: , ,

Leave a Reply