உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய அணி வீரர் முகமது ஷமியின் நிதியுதவி!

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளார். தீவிரவாத கொடூர தாக்குதலில் உயிரிழந்த ஒவ்வொரு சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்திய அணிக்காக நாங்கள் விளையாடும் போது நமது பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் தான் எல்லைப் பகுதிகளில் துணை நிற்கின்றனர். தற்போது அவர்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பாக நாம் அனைவரும் இருக்க வேண்டியது அவசியம்’ என தெரிவித்துள்ளார். மேலும், சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் தான் துணை நிற்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக் வீரர்களின் குழந்தைகளின் முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாகவும், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!