இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி பேசும்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பெரும் கவலை தெரிவித்தார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது நான் குறுக்கிட்டு, இந்தியாவைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டேன் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரும், மோடியும் சந்தித்துப் பேசியது தொடர்பாகவும் சுஷ்மா செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இரு நாடுகளிடையே நல்லுறவு நீடிக்க வேண்டியது அவசியம் என்று இந்தியா சார்பில் பாகிஸ்தான் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.
அதேசமயம், தீவிரவாத செயல்கள் தொடர்ந்தால், அது பாதிக்கப்படும். சுமூகமான, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்தைக்கு தீவிரவாத செயல்கள் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குண்டுவெடிப்புகள் தொடர்ந்தால் இரு நாட்டு பேச்சுவார்த்தையின் சத்தமும் அதில் காணாமல் போய் விடும். எனவே குண்டுவெடிப்புகள் முதலில் நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நாம் என்ன பேசுகிறோம் என்பது நமக்கு முதலில் புரியும். தொடர்ந்து நடைபெறவும் வழி பிறக்கும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட சதிகாரர்கள் மீதான வழக்கை பாகிஸ்தான் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஷெரீப்பை மோடி கேட்டுக் கொண்டார்.
ராஜபக்சேவுடன் மோடி பேசுகையில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பேசினார். மீனவர்கள் கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது குறித்து விவாதித்தார்.
நான் இந்தப் பிரச்சினை குறித்த பேச்சின்போது இந்தியாவைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டேன். 13வது அரசியல் சட்ட திருத்தம் குறித்தும் ராஜபக்சேவிடம் பேசப்பட்டது என்றார் சுஷ்மா.
















