வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆளுநரின் கவனம் திரும்பியுள்ளது.
வடபகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீண்ட இழுபறியின் பின்னர் அமைக்கப்பட்ட வடக்கு மாகாணசபை அந்த மக்களின் எதிர்பார்ப்பில் கடுகளவையேனும் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. மாறாக பெரும் நிதியை விரயம் செய்கின்றதொரு நிறுவனம் போன்றே செயற்பட்டு வருகின்றது.
பெரும் நிதிச் செலவில் இயங்கும் மாகாண சபைகளது செயற்பாடு
பெறுமதியற்றவையே
பொதுவாக மாகாண சபைகளை வௌ்ளை யானைகளுக்கு ஒப்பிட்டுக் கூறுவார்கள்.வடக்கு மாகாணசபை அதைவிட ஒருபடி மேலானது எனக் கூறுவதில் தவறொன்றுமில்லை. மாகாணசபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள், நிர்வாகச் செலவுகள் மற்றும் ஏனைய செலவினங்களுக்காக ஆண்டுதோறும் பல மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுகின்றது. மாகாணசபை உறுப்பினர்களுக்கும் வரிவிலக்களிக்கப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலமாக அவர்கள் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர். கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு அதிக பெறுமதியுடைய வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை போன்று தமக்கும் வழங்கப்பட வேண்டுமென அடம்பிடித்த மாகாணசபை உறுப்பினர்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களை நினைத்துச் சிரிப்பதா? அல்லது அழுவதா? என்பது தெரியவில்லை. மக்கள் எப்பாடுபட்டாலும் எமக்குப் பணம் தான் முக்கியமென நினைக்கின்ற இத்தகையவர்கள் பொதுச்சேவைக்கெனப் புறப்பட்டமை மிகக் கேவலமானதொரு செயலாகும்.
முன்னாள் மாகாண அமைச்சர்கள் ஊழல் மோசடி மற்றும் தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி முதலமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கென விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் முதலமைச்சரால் பெறப்பட்டது. இதன் அடிப்படையிலேயே அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக முதலமைச்சரின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையிலுள்ள விபரங்களைப் பொதுமக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
அதிர்ச்சி தரும் வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள்
ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஓர் அமைச்சர் மீதே ஊழல் குற்றச்சாட்டுக்கள் மாகாண சபையில் முன்வைக்கப்பட்டன. ஆனால் முதலமைச்சர் தன்னிச்சையான முடிவை மேற்கொண்டு, ஏனைய அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டுமெனக் கூறி அதன் பொறுப்பை விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்தார்.
இதன் பின்னர் மாகாணசபையில் இடம்பெற்ற அருவருக்கத்தக்க செயல்களை அனைவரும் அறிவார்கள். பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரொருவர் தாம் முதலமைச்சரால் தவறான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடருகின்ற அளவுக்கு நிலைமை எல்லை மீறிக் காணப்பட்டது. ஏனைய இரண்டு அமைச்சர்களும் கூட, தாம் அநியாயமான வகையில் முதலமைச்சரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்பத்தில் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு தமது பதவியைத் துறந்த முன்னாள் அமைச்சர், தற்போது முதலமைச்சரின் தீவிர விசுவாசியாக வலம்வந்து கொண்டிருக்கிறார். இவரைக் காப்பாற்றும் பொருட்டே முதலமைச்சர் அமைச்சர்களின் ஊழல் மோசடி தொடர்பாக மேற்கொண்டும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழாமலில்லை.
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை
குறித்து அக்கறை காட்டும் வடக்கு ஆளுநர்
தற்போது முதலமைச்சர் செய்யத்தவறிய ஒன்றை ஆளுநர் தமது கையிலெடுத்துள்ளார். இது முதலமைச்சர் மீது ஆளுநர் கொண்டிருக்கும் அவநம்பிக்கையை வௌிப்படுத்தி நிற்கின்றது.
ஆளுநர் இந்த விடயத்தில் எவ்வித பாரபட்சமுமின்றிச் செயற்பட வேண்டும். முன்னாள் அமைச்சர்கள், தற்போது பதவிவகிக்கின்ற அமைச்சர்கள் மட்டுமல்லாது முதலமைச்சரின் கீழ் உள்ள அமைச்சுக்கள் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அப்போதுதான் சகல உண்மைகளையும் வௌிக்கொணர முடியும்.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளதால், அதற்கு முன்னர் விசாரணைகள் இடம்பெற்று அவை தொடர்பான மேல் நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படல் வேண்டும்.
போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காது, மாகாண அமைச்சர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் நடந்து கொள்கின்றமை எந்த வகையிலும் ஏற்கமுடியாததொன்று. சில மாகாண சபை உறுப்பினர்கள் மீதும் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். இவர்கள் பதவிக்கு வந்தபின்னர் தத்தம் பொருளாதார நிலையில் மேம்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆகவே இவர்களும் விசாரிக்கப்பட்டு உண்மைநிலை கண்டறியப்படல் வேண்டும்.
வடக்கு மாகாண சபை மீதுள்ள களங்கம் துடைக்கப்படு வதற்கு உண்மையான விசாரணைகள் உதவுமென்பது நிச்சயமானதொன்று.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!