இலங்கை விவகாரத்தை கையாள விசேட பிரதிநிதி : மோடி ஆலோசணை

narendra-modiசர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை விவகாரங்களைத் தமது பிரதிநிதியூடாக நேரடியாகக் கையாள்வதற்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கலாமா? என்பது குறித்து புதிதாகப் பதவியேற்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆராய்ந்து வருகிறார் என புதுடில்லி வட்டாரங்கள் சில ‘மலரும்’ இணையத்துக்குத் தகவல் வெளியிட்டன.

வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு அப்பால், தமது நேரடி வழிகாட்டலில் செயற்படக் கூடியவராக மூத்த இராஜதந்திரி ஒருவரை இப்பதவிக்கு நியமித்து இலங்கை விடயங்களை நேரடியாகக் கையாண்டால் என்ன என்பது குறித்து புதிய இந்தியப் பிரதமர் பரிசீலிக்கின்றாராம். எனினும், அத்தகைய தீர்மானம் ஒன்றை அவர் இறுதியாக முடிவு செய்வதற்கும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கும் இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ‘முன்னுரிமை அடிப்படையில் புதிய பிரதமர் விரைந்து கவனிக்க வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. அவை தொடர்பில்தான் அவரது சிரத்தைகள் இப்போது உள்ளன. அதற்காக, இலங்கை விவகாரத்தை அவர் புறக்கணிப்பார் என்று அர்த்தமல்ல. விசேடமாகக் கவனித்து, தந்திரமாகக் கையாள வேண்டிய விவகாரம் இது என அவர் கருதுகிறார். அதனால் நேரடியாகத் தமது பொறுப்பில் அதைக் கையாள்வது குறித்தும் அவர் சிந்திக்கிறார். உரிய சமயத்தில் அவர் முடிவு எடுப்பார். தனது நேரடிப் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அவர் மூலம் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதே சரி என அவர் கருதுகிறார் போலும்.’ – என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் நெருக்கடி சமயத்தில் இலங்கை விவகாரத்தைக் கையாள மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியை நியமித்து, அவர் மூலம் நேரடியாக விடயங்களைக் கையாண்ட பாணியில் புதிய இந்தியப் பிரதமரும் செயற்பட எண்ணியுள்ளார் என அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்படி முடிவு எடுக்கப்பட்டால் அந்தப் பிரதிநிதியே இந்தியப் பிரதமரின் சார்பில் நேரடியாக இலங்கைக்கு வந்து இலங்கை அரசுத் தரப்புகளுடனும், ஜனாதிபதியுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட இலங்கை விவகாரத்தின் பங்காளித் தரப்புடனும் நேரடியாக ஊடாட்டம் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை விவகாரத்தில் விரைந்தும், தெளிவாகவும், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகவும் முடிவுகளை எடுப்பதற்கு இவ்வாறு விசேட பிரதிநிதி மூலம் அதனைக் கையாள்வதே பொருத்தமானது என பிரதமர் மோடி கருதுகின்றார் என்றும் கூறப்பட்டது. புதுடில்லியின் இந்தக் கருத்து நிலைப்பாட்டை கொழும்பும் அறிந்துள்ளது என்றும், புதுடில்லியின் நகர்த்தல்கள் குறித்து கொழும்பு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என்றும் கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags: , , ,

Leave a Reply