இலங்கை அரசு சொன்ன சொல்லை காக்கவில்லை: ஆதரவு கேட்டு ஜெயலலிதாவுக்கு இரா.சம்பந்தன் கடிதம்

sambanthan-talkஅண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உங்களுக்குக் கிடைத்த பெரு வெற்றிக்கு இலங்கை தமிழ் மக்களின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம். இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் தாங்கள் தொடர்ந்து காட்டிவரும் சிரத்தைக்கு நாம் நன்றியாக இருக்கும் அதேசமயத்தில் எங்களிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் உங்களுடனும் உங்கள் அரசுடனும் நெருங்கிச் செயல்படுவதற்கு எதிர்பார்த்தும் இருக்கிறோம்.

மீண்டும் வன்முறை இடம் பெறுவதை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் விரும்பவில்லை. தாமும், இலங்கையில் உள்ள ஏனையோரோடு தத்தம் பிரதேசங்களின் சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வதையே அவர்கள் விரும்புகின்றனர். 1983 ஆம் ஆண்டின் தமிழர் எதிர்ப்பு படுகொலைகளின் தொடர்ச் சியாக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் இறுதித் தீர்வைக் கொண்டு வருவதற்காக இந்தியா எடுத்த நல்முயற்சிகளை இலங்கை இணங்கி ஏற்றுக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் இடையூறுகள் ஏற்பட்ட போதிலும் இந்த முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தியா தொடர்ந்து ஒரு பங்கை ஏற்று, வகித்து வந்தது. மே 2009-ல் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து, வன்முறை நிறுத்தப்பட்டபோது, சமத்துவம், நீதி, உண்மையான தீர்வு ஆகிய வற்றின் அடிப்படையில் பிணக்குக்கு நிரந்தரமாக முடிவுகட்டும் அனைத்து வாய்ப்புகளும் உருவாகின. ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை – போர் நிகழ்ந்த காலத்திலும், போரின் முடிவுக்குப் பின்னரும் – இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை வழங்கி யிருந்தது. துரதிஷ்டவசமாக இந்த வாக்குறுதி நிறைவு செய்யப்பட வேயில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத் தின் பிரதி ஒன்றை தங்களின் மேலான கவனத்துக்காக நாம் இத்துடன் இணைத்துள்ளோம். அதில் பின்வரும் விஷயங்களைத் தெரிவித்துள்ளோம்:- தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டு வருவோம் என சர்வதேச சமூகத்திற்கும், இந்தியாவுக்கும் ஏற்கெனவே பல தடவைகள் தான் வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவு செய்யவேயில்லை.

தனது பல்வேறு செயற்பாடுகள் மூலம் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பிற தேசங்களின் இனப்பரம்பல் முறையை மோசமாக மாற்றியமைக்கவும், அதன் மூலம் அவர்களின் இனத்துவ, மொழியியல், பண்பாட்டு அடையா ளங்களை சீரழிக்கவுமான திட்டத்தையே இலங்கை அரசு முனைப்பாக முன்னெடுக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் மேற்படி நடவடிக்கைகள், ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வை எட்டுவதில் இலங்கை அரசுக்கு நேர்மையான பற்றுறுதி இல்லை என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் நல்லிணக்கம், நிரந்தர சமாதானம், அமைதி ஆகியவற்றுக்கான முயற்சிகளைப் பலவீனப்படுத்தும்; மோதல் நிலையைத் தீவிரப்படுத்துகின்ற சூழலை உருவாக்கும்; மேலும் தமிழ்ப்பேசும் மக்களுக்கு, அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் மீளச் சரிபண்ணவே முடியாத பல இழப்புகளை ஏற்படுத்தும்.

இலங்கையில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கவுரவமாக தீர்வு ஒன்று எட்டப் படுவதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவின் பங்களிப்புத் தொடரவேண்டும் என்று பிரதமரிடம் நாம் கோரியுள்ளோம். இதனை எட்டுவதற்கு உங்களின் முழு ஆதரவு தொடர்வது அவசியம் என்று தங்களை வேண்டி நிற்கிறோம். இயன்ற விரைவில் தங்களைச் சந்திக்க எதிர்பார்த்திருக்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் இரா. சம்பந்தன்.

Tags: , , ,

Leave a Reply