கல்லூரி முன்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவர் – காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்

தெலுங்கானாவில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் வரங்கல்லை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் ரவளி. இவர் வரங்கலில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதே கல்லூரியில் சங்கம் கிராமத்தை சேர்ந்த சாயி அன்வேஷ் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இவர் மாணவி ரவளியிடம் தன்னை காதலிக்குமாறு தெரிவித்தார். அதை அவர் ஏற்கவில்லை. ஆனால் சாயி அன்வேஷ் காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அதற்கு ரவளி மறுத்து விட்டார்.

இன்று காலை ரவளி கல்லூரி நுழைவாயில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாயி அன்வேஷ் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ரவளி மீது திடீரென்று ஊற்றினார்.

இதை பார்த்து சக மாணவர்கள் சாயி அன்வேஷ் ஆசிட் வீசுவதாக நினைத்துக் கொண்டு சிதறி ஓடினார்கள். அப்போது சிகரெட் லைட்டரை ரவளி மீது வீசிவிட்டு ஓடிவிட்டார்.

இதில் ரவளி உடலில் தீப்பிடித்து எரிந்தது. அலறி துடித்த அவரை மாணவர்கள் தீயை அணைத்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தப்பி ஓடிய சாயி அன்வேஷை சில மாணவர்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தீயில் கருகிய மாணவி ரவளி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!