தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவும் அவருடைய தாயாரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயாரும் இம்மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவருக்கு அடைக்கலம் வழங்கிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் சமர்ப்பிக்கப்படாதுள்ள தடுத்துவைக்கும் உத்தரவினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எனினும் நேற்றைய தினம் வழக்கிற்கு நீதிபதி சமூகமளிக்காமையால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















