சிறிலங்கா அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் இனவெறியினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை ஒரு மணித்தியால அடையாள போராட்டம் நடத்தவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் உளள் அளுத்தம பகுதியில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 80 மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும் வீடுகள், மதத்தலங்கள், வியாபார நிலையங்கள் என்பன உடைக்கப்பட்டு பெரும்தொகையான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்டமும் அப்பப்போது பிறப்பிக்கப்பட்டு தளர்த்தப்பட்டு வருகின்றது. அங்குள்ள மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை 19 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியில் இருந்து ஒரு மணிவரைக்கும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அடையாளப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழககத்தின் அனைத்தும் பீட மாணவர்களும், ஆசியரியல் மற்றும் ஊழியர் சங்கத்தினரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று யாழ்.பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
















