தமிழகத்தில் திரைப்படத் திரையிடல் நிகழ்வின்போது சிலர் பிரசன்னாவிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? தனி ஈழம்தான் தமிழர்களுக்கு தீர்வு என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா என்ற கேள்விகளே அங்கு எழுப்பட்டன. பிரசன்ன விதானகே வன்னிக்கு வரும்போது ஒரு பொதுவெளியில் வைத்து இத்தகைய கேள்விகளை யாரும் அவரிடம் கேட்கவில்லை.
அவர் வன்னிக்கு வந்து தன் திரைப்படபங்களை திரையிட்டுக் காட்டினார். பிரசன்ன சிறந்த சிங்கள இயக்குனர் மட்டுமல்ல. அவர் உலகத்தரமான இயக்குனர். அவரது நோக்கம் திரைப்படத்தை வணிகமாக்குவதல்ல. அதை அவரது திரைப்படத்தை பார்க்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும். தன் திரைப்படங்களின் மூலம் இனப்பிரச்சினையை அவர் நுட்பமாக பேசுகிறார்.
பிரசன்ன விதானகே ஒரு சிங்களவர் என்ற காரணத்திற்காக அவர்மீது கண்மூடித்தனமாக விமர்சிக்கும் ஒரு சிலரது விமர்சனங்களை வைத்து சிலர் தமிழ் Nதிசயத்தின்மீது சேறடிக்க முனைகின்றனர். அடிப்படை புரிதலற்ற தமிழ் தேசியவாதிகள் ஒரு சிலர் அந்தப் படத்தை எதிர்ப்பதை வைத்து அதை தமிழ் தேசியத்தின்மீது அவதூறுகளை ஏற்படுத்துவது அறிவிலித்தனமானது. தமிழ் தேசியம் சார்ந்து இயங்கும் பலர் இந்த திரைப்படம் மிகவும் சரியாக எடுக்கப்பட்ட நல்ல திரைப்படம் என்றே தமது கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.
முதலில் ஒரு விடயம் நாம் தெளிவாக இருக்க வேண்டும். பிரசன்ன விதானகேயின் திரைப்படத்தை விமர்சிக்க எல்லாருக்கும் உரிமையுண்டு. ஒவ்வொருவரது விமர்சனங்களும் ஒவ்வொரு விதமாக அமையும். அது அவரவர் பார்வையை அணுகுமுறையையும் பொறுத்தது. பிரசன்னா இந்த திரைப்படத்தின் ஊடாக சொல்லும் செய்திக்கு எதிரானவர்கள் பிரசன்னவுக்கு அருகில் நிற்கிறார்கள் என்பதற்காக இந்தப் படத்தை எதிர்ப்பதும் அறிவிலித்தனமானது.
அத்தகைய ஈழ எதிர்ப்பாளர்கள் பிரசன்னாவை தமிழ் தேசியம் சார்ந்தோர் எதிர்க்க வேண்டும் என்பதற்காவும் தங்கள் நலன்களை சாதிப்பதற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள். இனப்படுகொலைக்கும் எதிராக குரல் கொடுக்காமல் ஈழத்தில் நடக்கும் அநீதிகளை மூடிமறைத்துச் செயல்படும் இச் சிலர் பிரசன்னவை ஆதரிப்பது விநோதமானது. இவர்கள் குறித்து பிரசன்ன அறியாதிருக்கக்கூடும்.
ஆனால் பிரசன்னாவுக்கு எங்கள் போராட்டம் குறித்து சரியான புரிதல் இருக்கிறது. எங்கள் போராட்டம் நியாயமானது. சரியானது என்பதனாலேயே அன்று வன்னிக்கு வந்தார். அதற்கான தன் பங்களிப்பாகவே அவர் சிங்கள தமிழ் – முரண்பாடுகள் குறித்து திரைப்படம் எடுக்கின்றார். அவரிடம் எழுப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை அவர் இயக்கிய திரைப்படத்தில் இருந்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தன் திரைமொழியின் ஊடாக சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார்.
அவர் நேரடியாக சொல்வதை விடவும் அவரது திரைமொழி அழுத்தமானது. இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவமும் சிங்கள அரசும் ஈழத் தமிழர் உரிமையை மறுத்த சிங்களப் பேரினவாதிகளும்தான் எங்கள் எதிரிகள் என்பதில் அவர்கள் உறுதியோடு இருந்தனர். சிங்கள முற்போக்கு – நட்புசக்திகள் எங்களுக்காக குரல் கொடுப்பதுதான் எங்கள் போராட்ட நியாயத்தை சிங்கள மக்களுக்கு புரிய வைக்கும் என நம்பினார்கள்.
தன் சகோதரர்களை கொலை செய்த ஒருவனுடன் தமிழ் பெண்ணொருத்தி இணைந்து வாழ முடியாது என்பதை இந்தப் படத்தில் பிரசன்னா சொல்கிறார் எனில் அதுவே இன்றைய இலங்கை – ஈழ யதார்த்தமாக இருக்கிறது. அதுவே தமிழ் – சிங்கள முரண்பாடாக இருக்கிறது. இலங்கையில் இன நல்லிணக்கம் காணப்படுகிறது என்ற இலங்கை அரசின் பிரசாரத்தை இந்தப் படம் கேள்விக்குள்ளாக்கிறது. ஒரே நாடு ஒரே மக்கள் என்ற வெற்றுக்கோசத்தை நிராகரிக்கிறது.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறுகிற உலகத்தை நோக்கி இன நல்லிணக்கம் ஏற்பட சாத்தியம் இல்லை என்பதை இந்தப் படம் சொல்லுகிறது. இந்த விடயத்தை சிங்கள முற்போக்குதரப்பில் இருந்து சொல்லுவது மிகவும் முக்கிமானது. போர் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, போரில் மக்கள் கொல்லப்படவில்லை. இராணுவம் எவரையும் கற்பழிக்கவில்லை என்று சிங்கள அரசு பொய் பிரசாரத்தை திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கையில் இந்தப் படமோ ஒரு கதையின் ஊடாக போரில் என்ன நடந்தது என்பதை சொல்கிறது.
இன்றைய காலத்தின் முக்கிய பிரச்சினை இது. இன்று சிங்கள இராணுவத்தினர் பலர் தமிழ் பெண்களை திருமணம் செய்கின்றனர். இன அழிப்புச் செய்யம் நோக்கில் இனக் கலப்புச் செய்யும் நோக்கில் இராணுவமும் அரசம் திட்டமிட்டுச் செய்கின்றது. இந்த சூழலிலேயே இவ்வாறானதொரு படத்தை பிரசன்னா இயக்கியுள்ளார். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சிங்கள இராணுவத்துடன் தமிழ் பெண்களை திருமணம் செய்து வைப்பதன் மூலம் எல்லா விடயங்களையும் மறைக்கவும் இல்லாமல் செய்யவும் முடியுமென நினைக்கிறது.
ஒன்று தமிழர்கள் தனிநாடு கோரமாட்டார்கள் எனவும் இனப்படுகொலை போர்க்குற்றம் குறித்து கே;ளவி எழுப்ப மாட்டார்கள் எனவும் அதனால் சர்வதேச அழுத்தங்கள் எழாது எனவும் நினைக்கின்றது. இதுவெல்லாம் உண்மையல்ல. இதுவெல்லாம் சாத்தியமல்ல என்பதை பிரசன்ன இந்தப் படத்தில் உணர்த்த முனைகிறார் என்றே படுகிறது. அந்தளவுக்கு கொடியதொரு இனப்படுகொலையை சிங்கள அரசு இழைத்துள்ளது என்பதை பிரசன்ன விதானகே ஏற்றுக்கொள்கிறார். தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ முடியாது என்பதை காட்டுகிறார். இதை சிங்களத் தரப்பிலிருந்து சுட்டிக்காட்டுவது முக்கியமானது.
தமிழ் இனப்படுகொலை குறித்த போர்க்குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்திய முக்கியமானவர் பாஷன அபேயவர்த்தன. அதனால் இன்று அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஈழ இனப்படுகொலைப் போருக்கு எதிராக குரல் கொடுத்த கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். சிங்கள முற்போக்குச் சக்திகள் தேவை என்பதில் ஈழத் தமிழர்தரப்பு உறுதியாக இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக குறிப்பிடத்தக்கவர்களே எமக்காக குரல் கொடுத்தனர்.
பிரசன்ன விதானகேயிற்கு இருக்கும் குற்ற உணர்ச்சி நான் காணும் சிங்கள சகோதரர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தும் அதை குற்ற உணர்வின்றி மறைக்கிறார்கள். எங்களை மறைக்கவும் மறக்கவும் நிர்பந்திக்கிறார்கள். அவர்கள் பயங்கரவாதத்தை தோற்கடித்த யுத்தம் என்கிறார்கள். இந்த நாடு முழுவதும் தங்களுக்குச் சொந்தம் என்கிறார்கள். கொல்லப் பட்டவர்களுக்ககு நீதி வேண்டும் என்றோ, காணாமல் போனவர்கள் திரும்ப வேண்டு மொன்றோ நினைக்கவில்லை.
எங்கள் காயங்களைக் குறித்துப் பேச அவர்கள் தயார் இல்லை. முழுக்க முழுக்க யுத்த வெற்றியின் மமதையில் உள்ளனர். நடந்தது நடந்துவிட்டது. முடிந்தது முடியட்டும் இனி இணக்கமாக வாழுவோம் என்கிறார்கள். திட்டமிட்டு அது நடத்தப்பட்டபோது அதை எப்படி மறப்பது? ஈழ மக்களுக்கு எதிரான யுத்தம் இனப்படுகொலை யுத்தம், அது மறக்கவோ, மன்னிக்கவோ முடியாத காயம்.
எனது கொழும்பு கவிதை எதிர்பார்த்ததைத்தான் பிரசன்னவின் திரைப்படமும் எதிர்பார்க்கிறது. எனது அந்தக் கவிதை சொல்ல வருவதைத்தான் பிரசன்னவும் சொல்ல வருகிறார். அது முக்கியமான பிரச்சினை. இந்தத் திரைப்படம் சிங்கள மக்களிடம் எடுத்துச்செல்லப்பட வேண்டும். நீங்கள் ஏற்படுத்தியது மறந்து வாழக்கூடிய காயங்கள் இல்லை என்பதை அவர்கள் உணரவேண்டும். அது இணக்கத்தை ஏற்படுத்த முடியாத காயம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்களும் நாங்களும் சேர்ந்து வாழ முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதை நாங்கள் சொல்லும்போது பிரிவினைவாதம் – பயங்கரவாதம் என்கிறார்கள். பிரசன்னா போன்றவர்களையும் சிங்கள அரசும் சிங்களப் பேரினவாதிகளும் சிங்களப் புலிகள் என்றே கூறுகிறார்கள். இவ்வாறான நெருக்கடிகளின் மத்தியில் தமிழர்களின் போராட்டத்தை – பிரச்சினையை அழுத்தமாக எடுத்துரைக்கும் இந்த திரைப்படம் குறித்து நாம் நமது விமர்சனங்களை உரிய அணுகுமுறையோடு முன்வைப்பதே அறமும் அவசியமுமாகும்.
















