இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச, அமெரிக்காவின் போர்க்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அந்நாட்டின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் ‘தி டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ச, இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய பின்னர் 1990ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்திருந்தார். 2005ஆம் ஆண்டு மூத்த சகோதரரான அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உதவுதற்காக கோட்டபாய மீண்டும் இலங்கை திரும்பிய போதும், அமெரிக்காவின் குடியுரிமையை கொண்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த போர்க்குற்ற விசாரணைகளில் இலங்கை அரசின் பங்கு உறுதி செய்யப்பட்டால், கோட்டபாய ராஜபக்சவுக்கு பிரச்னை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை கொண்ட ஒருவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 1996ஆம் ஆண்டு அமுலாக்கப்பட்ட போர்க்குற்ற சட்டத்தின் கீழ் கோட்டபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் இதுவரையில் அமெரிக்காவினால் யாருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















