தமிழீழ இன அழிப்பில் பிரித்தானியா அரசின் பங்கு திடுக்கிடும் புதிய செய்தி!

phil_miller_intலண்டனில் கார்பொரேட் வாட்ச் (Corporate Watch) என்ற நிறுவனத்தின் ஆய்வாளர் ஃபில் மில்லர் என்பவர் ஈழத்தமிழர்களின் இன அழிப்பில் பிரித்தாணியா அரசுக்கு உள்ள பங்கினை சிறிலங்கா மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். பிரேமெனில் அமைந்திருக்கும் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் வெளியிட்டுள்ள ‘தமிழர்களுக்கெதிரான பிரித்தாணியாவின் அருவருப்பான போர்: 1979 – 2009’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள நூலில் இது வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியானது பிரித்தாணிய தேசிய ஆவணக் காப்பகத்திலும், சுதந்திரத் தகவல் கோரிக்கைகள் மூலமும், பொதுமக்கள் மூலமும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட செய்தியாகும். வன்னிப் போரில் உயிர்தப்பிய மருத்துவர் என். மாலதி ஃபிலிப் மில்லரோடு சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டார்.

நியூசீலாந்திலிருந்து மருத்துவர் என். மாலதி வெளியிட்ட இந்தச் செய்தியின் விரிவு:

பொதுவில் இல்லாத உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியுள்ளது. உண்மையானது அதிகார சக்தியின் எதிர்நிலையில் உள்ளபோது, அதாவது பிரிட்டிஷ் அரசின் எதிர்நிலையில் உள்ளபோது, உண்மைக்கான ஆதாரங்களைப் பெறுவது மிகச் சிரமம். உண்மையை வெளிக்கொணரவேண்டுமென்று உழைப்பவர்களின் ஐய்யமற்ற பணி இது. அப்படிபட்ட ஒரு முயற்சியே ஃபில் மில்லரின் ‘தமிழர்களுக்கு எதிரான பிரித்தாணியாவின் ஓர் அருவருப்பான போர்’ என்ற அறிக்கை. இது பிரேமெனிலுள்ள அனைத்துலக மனித உரிமை அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.

காலனியாதிக்கத்துக்குப் பின்னதான காலத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்திட பிரித்தானியா வகித்த பங்குப் பாத்திரத்தைப்பற்றி இந்த அறிக்கை விவரிக்கிறது. பிரிட்டிஷ் ஆவணங்களிலிருந்தும், சுதந்திரத் தகவல் கோரிக்கைகளுக்குக் கிடைத்த பதில்களிலிருந்தும், பொதுத்தளத்திலிருந்தும் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஃபில் மில்லர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆதாரத்திலிருந்தும் தகவல்களைப் பெறுவது மிகச் சிரமமாக இருந்தது. அவற்றிலிருந்து உண்மையை தொகுப்பதும் அப்படியே. பொதுத்தள தகவல்களும் அப்படியே. இவ்வாறான தகவல்களிலிருந்து ஃபில் மில்லர் படிக்கக்கூடிய வகையில் காலக்கிரமமாக இந்த அறிக்கையை தயாரித்துள்ளார். இது ஒரு சாதாரண முயற்சியல்ல.

இந்த அறிக்கையில் தரப்பட்டுள்ள விரிவான ஆதாரங்கள் 1984 – 87 காலத்தில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளை திரைமறைவில் பயன்படுத்தியமை, 1983 முதல் இந்நாள் வரை சிறிலங்கா ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் வெளிப்படையாக பயிற்சியளிப்பது, போர் நிறுத்தத்தின்போது எல்.டி.டி.இ.-ஐ. வலுவிழக்கச் செய்வது மற்றும் 2009-ல் சிறிலங்காவுக்கெதிரான ஐ.நா. பாதுகாப்பு அவையின் நடவடிக்கையை தடுப்பது வரை உள்ளன.

இந்த அறிக்கையில் ஆதாரங்கள் மூன்று பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன. முதலாவது 1979-89 காலத்தில் ‘தமிழர் பிரச்சினையைக் கையாள்வது’ என்ற தலைப்பில் பிரிடிஷ் ராணுவ அதிகாரிகளை திரைமறைவில் பயன்படுத்தி சிறிலங்கா ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் வெளிப்படையாக பயிற்சியளித்து, இந்திய ராணுவத்திற்கு 1987-ல் ஆலோசனைகள் வழங்கியமையும் சொல்லப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட பல பிரிட்டிஷ் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில் 1990-2002 காலத்தில் சிறிலங்கா ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளித்தமை விவரிக்கப்பட்டுளது. இந்த இரண்டாவது பகுதியிலேயே சிறிலங்கா ராணுவ கட்டளையும், ராணுவ ஊழியர் கல்லூரியும் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனங்களில் பல பிரிட்டிஷ் அதிகாரிகள் பங்குபற்றினர். அவர்களில் பலர் இவற்றில் நிரந்தரமாக உள்ளனர். மூன்றாம் பகுதி 2002 – 2009 வரையான ஆண்டு காலப்பகுதியை உள்ளடக்கியது. இந்தப் பகுதியில் ஐரோப்பிய நாடுகள் எல்.டி.டி.ஈ.ஐத் தடை செய்வதில் பிரித்தாணியாவே மூல காரணமாக இருந்தது விளக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் போர்நிறுத்தம் நடப்பில் இருந்தபோது பிரித்தானியா தனது ஏராள வகை ஆயுதங்களை சிறிலங்காவுக்கு விற்றுள்ளது.

இரண்டாவது பகுதியில் பண்டாரநாயகே விமானத்தளத்தின் மீதான புலிகளின் தாக்குதலின் பின் புலிகளோடு போர் நிறுத்தம் செய்துகொள்வதைத் தவிர்க்குமாறு பிரித்தானியா சிறிலங்காவுக்கு அறிவுறுத்தியுள்ளது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் பிறகு தனது ஓய்வு பெற்ற 15 ராணுவ அதிகாரிகளை சிறிலங்காவுக்கு அனுப்பி முக்கிய இடங்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளது. இதன்மூலம் போர் நிறுத்தத்தை தவிர்க்க உதவிபுரிந்துள்ளது.

2003-2009 காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு பிரித்தானிய ஆயுத விற்பனை செய்துள்ளதை இந்த அறிக்கை விலாவாரியாக விவரிக்கிறது. சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆயுத விற்பனைகளை பிரித்தானியா மேற்கொண்டது. அக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான விநியோகங்களை, பெரும்பாலும் கணனிகள் ,( ராணுவ பொருட்கள் அவரால் அனுப்பப்படவில்லை) மேற்கொண்டமைக்காக சாந்தன் என்ற முன்னணி பிரித்தானிய தமிழ்ச் செயற்பாட்டாளரைக் கைது செய்து அவருக்கு பிரித்தானிய அரசாங்கம் இதற்காக பின்னர் 2009-ல் சிறைத்தண்டனை விதித்தது.

டிசம்பர் 2013-ல் பிரேமெனில் நடைபெற்ற சிறிலங்கா மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் ஃபில் மில்லர் வழங்கிய ஆதாரங்களின் விரிவான தொகுப்பாகும் இவ்வறிக்கை. இவரது இந்த அறிக்கையோடு, விராஜ் மெண்டிஸ் அளித்துள்ள ஆதாரங்களும் இனப்படுகொலையில் பிரித்தானியாவின் பங்கை அம்பலப்படுத்துகின்றன. வரும் ஜூலை 15-ம் தேதி சிறிலங்காவைச் சேர்ந்த இணையத்தளத்தில் (www.ptsrilanka.org) விராஜ் மெண்டிஸ் அளித்துள்ள ஆதாரங்கள் வெளியாகவுள்ளது.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் பிரித்தானியாவின் இனப்படுகொலை பங்களிப்பைப் பற்றிய தீர்ப்பை வெளியிட்டபோது சில பிரித்தானிய தமிழர் வட்டாரங்களில் வியக்கத்தக்க எதிர்விளைவுகள் ஏற்பட்டன. சிலர் இந்தத் தீர்ப்பை நிராகரித்தனர். வேறு சிலர் இந்தத் தீர்ப்பு வெளியாகக் கூடாது என்று விரும்பினர். இது புரிந்துகொள்ளத்தக்கது. இதைப் புரிந்து கொள்ள ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். இந்தியாவில் ஓர் உயர் சாதியினன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினனைக் கொலை செய்துவிட்டால், பல தாழ்த்தப்பட்ட சாதியினர்கள் அந்த கொலைக்குற்ற உயர் சாதியினனுக்கு எதிராக ஆதாரங்களை வழங்க மறுப்பார்கள். இதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தால் பிரித்தானியாவுக்கு எதிரான தீர்ப்பை சில தமிழர்கள் பிரித்தானியாவில் நிராகரித்ததையும் புரிந்துகொள்ளலாம்.

தமிழீழ இன அழிப்பில் வலுமிக்க சக்திகளின் பங்கை மறைக்காமல் வெளிப்படுத்துவது இந்த சக்திகள் ஏற்படுத்திய, ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன அழிப்பை புரிந்து கொள்ள உதவும். இதை நோக்கிய திசையில் ஃபில் மில்லரின் முயற்சி ஒரு முக்கிய பங்களிப்பாகும்.

மொழிபெயர்ப்பு: நிலவரசு கண்ணன்

மூலம்: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=37293

Tags: , ,

Leave a Reply