குடிக்க தண்ணீர் கேட்ட போது பொலிஸ் அதிகாரி தன் வாயில் சிறுநீர் கழித்தார் என சந்தேக நபர் ஒருவா் முறைப்பாடு செய்துள்ளார். சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத பிணக்குகள் பிரிவு அதிகாரிகள் தம்மை துன்புறுத்தியதாக 28 வயதான சஞ்சீவ எதிரிசிங்க என்ற நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாதம்பை செம்புகட்டிய பிரதேசத்தில் உள்ள கடையொன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் சஞ்சீவ உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கடந்த மே மாதம் 9ம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர். நான்கு நாட்கள் வரையில் சந்தேக நபர்களை உறவினர்களுக்கு பார்க்க அனுமதிக்கவில்லை. சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கொடூரமான துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிட்டதாக சஞ்சீவ தெரிவித்துள்ளார். ஆடைகளை முழுமையாகக் களைந்து, உடல் முழுவதிலும் மிளகாய் மற்றும் மிளகு அரைத்து பூசி அதன் பின்னர் தாக்கினார்கள்.
நான் அப்பாவை பார்ப்பதற்காக அம்பாறை சென்று வீடு திரும்பிய போது, வான் ஒன்றில் வந்த சிவில் உடை தரித்தவர்கள் சிலாபம் பொலிஸார் எனத் தெரிவித்து என்னைக் கைது செய்தனர். பச்சை குத்தி தலை மயிர் வளர்த்தவர்களே என்னைக் கைது செய்தனர். புகைப்படங்கள் இரண்டைக் காண்பித்து தெரியுமா எனக் கேட்டார்கள் எனக்கு தெரியாது என்றேன். அதன் பின்னர் ஆடைகளைக் களையுமாறு கோரினார்கள், நான் முடியாது என்றேன்.
இவனுக்கு வாய் கூட எனத் தெரிவித்து என்னைத் தாக்கத் தொடங்கினார்கள். கைகள் இரண்டையும் கட்டி மேலே தொங்கவிட்டு என்னைத் தாக்கினார்கள். நான் எந்தவொரு காலத்திலும் களவுகளில் ஈடுபட்டதில்லை எனக் கூறினேன். இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார்கள். என்னுடன் மேலும் மூன்று பேரை அழைத்து வந்து தாக்கினார்கள் அதில் ஒருவர் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர். எனினும் அவரைத் தாக்கவில்லை. தாக்குதலுக்கு இலக்கான நான் தண்ணீர் தாகம் எனத் தெரிவித்தேன். அங்கிருந்த உயர் அதிகாரி என் வாயில் சிறுநீர் கழித்தார்.
ஒரு வாரமளவில் எனது ஒரு கை செயலற்றுப் போனது. சிலாபத்தில் உள்ள தமிழ் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் சென்று மருந்து கட்டினார்கள். பின்னர் மே மாதம் 16ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்கள். எங்களைத் தாக்கியவர்களே, நீதிமன்றில் எங்களுக்காக வாதாட சட்டத்தரணிகளை பிடித்துக்கொடுத்தனர். தாக்குதல்கள் குறித்து முறைப்பாடு செய்தால் முழு குடும்பத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி வீட்டுக்கு குண்டு வீசுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். மகன் தரம் இரண்டில் கல்வி கற்கின்றார். சில நாட்களாக மகன் உணவு இன்றியே பாடசாலை செல்கின்றார்.
தாக்குதல் காரணமாக கை செயலிழந்துள்ளது. இதனால் என்னால் வேலை செய்ய முடியாது. எங்கள் குடும்பத்தினருக்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சஞ்சீவ சிங்கள ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் தரப்பில் எவ்வித கருத்துக்களும் வெளியிடவில்லை.
















