அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கமாக்கிக் கொள்வதற்காக அவர் மக்களை மௌனமாக்க முயற்சிக்கிறார்…
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவி கவிழ்ப்பு குறித்த அச்சத்தில் சிக்கியிருப்பதாகவும் இத்ன் காரணமாக அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கமாக்கிக் கொள்வதற்காக அவர் மக்களை மௌனமாக்க முயல்வதாகவும், மனித உரிமை பணியாளர்கள் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அமைச்சர் ஆகியோரை மேற்கோள் காட்டி சர்வதேச செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட உத்தரவிற்கு இந்த அச்சமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டே தனக்கு எதிரான குரல்களை மௌனமாக்க முயல்வதாக அரசசார்பற்ற அமைப்புகளின் பணியாளாகள் தெரிவித்துள்ளனர்.
நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் வேளையில் அரசு தனது நிலை ஆட்டம் காண்பதாக உணர்கிறது, அதன் காரணமாகவே அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிரான உத்தரவு வெளியானது என ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காக யு.எஸ்.எயிட் முன்னெடுக்க இருந்த திட்டம் காரணமாக அரசு கடும் அச்சமடைந்தது, ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அரசில் உள்ள சிலர் அச்சமடைந்துள்ளனர் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
















