வெலிக்கட சிறைக்குள் நடந்தது கலவரம் அல்ல – இனப்படுகொலையே… : ச.ச.முத்து

kuttimani-jeganஜூலை 26, 2014 (1983 யூலை 25,28ம் திகதிகளில் வெலிக்கட சிறைச்சாலை இனக்கொலை நினைவாக)முப்பத்தி ஒரு வருடம் கடந்து விட்டிருக்கிறது.

அந்த இனப்படுகொலை மிகவும் திட்டமிட்ட முறையில் வெலிக்கட சிறைக்குள் நிகழ்தப்பட்டு, அது மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு இனக்கொலை அங்கமே.

ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களின் மொழியை, இலக்கியத்தை, நிலத்தை அபகரி, அழி என்று சொல்லப்பட்ட தத்துவங்களில் சொல்லப்படாத ஆனால் மறை முகமான ஒன்று அதுதான் மிகமிக முக்கியமானது.
ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் போராட்ட கருத்துக்களை அதன் வீரத்தை அழித்தாலே போதும். மற்றவை எல்லாவற்றையும் இலகுவாக எதிரியால் செய்துவிடமுடியும். அப்படியான ஒரு சந்தர்ப்பத்துக்காகவே சிங்களம் காத்து இருந்தது.

அந்த நாள்தான் யூலை 23 1983ம்ஆண்டு.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டமானது தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், நடேசதாசன், சிவபாதம், தேவன் ஆகியோரின் கைதுகளுடன் ஓய்ந்துவிடும் அல்லது வேகம் குறைந்துவிடும் என்றே சிங்களம் 81 நடுப்பகுதிக்கு பின்னர் கனவுகண்டு ஓய்ந்து இருந்தது.

ஆனால், எல்லாம் ஒரு கொஞ்ச காலத்துக்குதான். முன்னரைவிட வேகத்துடனும் இதுவரை இல்லாத சுடுதிறன் கொண்ட ஆயுதங்களுடனும் போராட்டமானது சிங்கள காவல்துறை மீது இருந்து தமது இலக்குகளை சிங்கள இராணுவத்தினர் மீது முழு ஆயுதபாணியான காவல் நிலையங்கள மீது என்று திரும்பிய போதே சிங்களம் கொஞ்சம் அரண்டு கனவு கலைந்தது.
மிகவும் கொடூரமான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம், புலிகள் தடை சட்டம் என்று எதுவுமே தமிழர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் ஓருங்கிணைவும் தருவதை ஒருபோதும் நிறுத்தி விடாது என்பதை சிங்களம் உணர்ந்த பொழுது அது.

அதனைப் போலவே, சிங்கள ஜனாதிபதியின் தனிப்பட்ட விசேட பணிப்பின்பேரில் வடக்குக்கு வந்த தளபதிகள் ஆடிய எந்தவொரு வெறியாட்டமும், போராளிகளை தேடி அழித்த செயலும் சிறு பயத்தையோ பின்வாங்கலையோ போராளிகளுக்கு ஏற்படுத்தவில்லை என்பதையும் சிங்களம் படித்து கொண்டது.
இதற்கிடையில் சிங்களத்தின் தலைநகரில் ராணுவ காவலுடன் நடந்த நீதிமன்ற வழக்குகளின் மரண தண்டனை தீர்ப்புகளைகூட துச்சமாக தூக்கி எறிந்து ஜெகன்’ சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியதும்,

தங்கத்துரை ‘தமிழீழம் அடைவதை எந்தவொரு சக்தியும் தடுத்திட முடியாது’ என்று பிரகடனப்படுத்தியதும்
குட்டிமணி’ என்னை தூக்கில் இடலாம். நாளை என்னைப் போன்ற பல்லாயிரம் குட்டிமணிகள் தோன்றுவார்கள். தமிழீழம் என்ற இலட்சியத்துக்காக போரிடுவார்கள்’ என்று நீதிமன்ற கூண்டுக்குள் நின்று சொல்லியதும் மேலும் மேலும் தமிழீழ இலட்சிய கனலை மூட்டியது வேறு சிங்களத்துக்கு மிரட்சியை உருவாக்கி இருந்தது.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்துக்கு வரவர பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அதிகரிப்பதை கண்டு தமிழர் விடுதலைக்கூட்டணிகூட தமது பாராளுமன்ற உறுப்பினராக சிறையில் இருந்த குட்டிமணியை நியமிக்க வேண்டிய வரலாற்று தேவை உருவாகியதும் சிங்களம் இன்னும் மாவம்ச பயத்துள் மூழ்க காரணமாயிற்று.
இது எல்லாவற்றையும் தடுப்பதற்கான முயற்சிகள் சிங்களத்தால் எடுக்கப்படவில்லை என்பது அல்ல. எல்லாவிதமான அடக்குமறைகளும் பயங்காட்டுதல்களும் பயனற்றுபோன ஒருபொழுதில் தமிழ் மிதவாத தலைமைகளையும் சில சட்டதரணிகளையும் கொண்டு சிறைக்குள் இருந்த ஆயுதப்போராட்ட தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணியுடன் பேசியும் பார்த்தது.

தங்கத்துரை, குட்டிமணியை கொண்டு ஆயுதப்போராட்டத்துக்கு, ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து அறிக்கைவிடவும் அதன் ஊடாக தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்ட செயற்பாடுகளை தணிக்கவும் மிகவும் செறிவாக முயற்சித்தது.

இப்படியான அறிக்கையை பகிரங்கமாக விடுத்தால் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராக தமிழர் விடுதலைக்கூட்டணியால் நியமிக்கப்பட்டிருந்த குட்டிமணி அவர்களின் நியமனத்தை ஜனாதிபதி ஏற்பார் என்றும் ஆசை ஊட்டப்பட்டது.

ஆனால் இவை அனைத்தையும் தங்கத்துரை, குட்டிமணி ஆணித்தரமாக மறுத்துவிட்டார்கள். (இதனால் குட்டிமணியின் நியமனம் செல்லாதது என்று ஜே ஆர் ஜெயவர்தனாவும், குட்டிமணியை பாராளுமன்றம் சென்று சத்தியபிரமாணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று சிறைச்சாலை ஆணையர் டெல்கொட அறிவித்ததும் நடந்தது)

இதன் பின்னர் சிறைச்சாலைகளில் ஒருவித அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. வெளியில் வடக்கில் சிங்கள காவல், ராணுவம் மீது தாக்கு நடக்கும்போதெல்லாம் தனிச்செல்களில் அடைப்பதும் உப்பு கொட்டப்பட்ட சோறு வழங்கப்படுவது என்று அது ஒருவிதமான அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இவர்களை அழிப்பதன் மூலம் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மீது ஒரு அச்சுறுத்தலை ஒரு முன்னோர் இல்லாத வெறுமையை உருவாக்கலாம் என்று சிங்களதலைமை திட்டமிட்டது. வெலிக்கட இனக்கொலை யூலை 25ம்திகதி நிகழ்த்தப்பட்டது. ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன்னரேயே பயங்கரவாத தடைச்சட்டத்தில் சில புதிய திருத்தங்கள், இணைப்புகள் சிங்களத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தப்பிச்செல்ல ஏற்படுத்தும் முயற்சிகளின்போது அவர்களை அழிப்பதற்கும் இதன்போது ஏற்படும் மரணங்களை விசாரிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு இருக்கும் என்றும் மாற்றப்பட்டது. பின்னர் வெலிக்கட சிறையின் வெளிக்காவல் முழுக்க முழுக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. எப்போதும் ஒரு பிளட்டூனுக்கும் அதிகமான ராணுவத்தினர் ஆயுதங்களுடன் 24மணி நேரமும் நிற்பர்.
சிங்கள ஜனாதிபதி இதற்கு முன்னரே வெளிப்படுத்தி இருந்த சிங்கள இராட்சச நினைபடபான ‘தமிழர்களின் உயிர்களை பற்றி எனக்கு அக்கறை எதுவுமே இல்லை’ என்பதற்கும் ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ என்பதற்கும் வடிவம் கொடுக்க சிங்களம் தயாரானது.

திருநெல்வேலியில் யூலை 23ல், 13 சிங்கள ராணுவத்தினர் அழிக்கப்பட்டதும் அதனையே தமது தமிழின வேட்டைக்கு உரிய துருப்பு சீட்டாக்க சிங்கள தலைமை எண்ணம் கொண்டது. அழிக்கப்பட்ட சிங்கள ராணுவத்தினரின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பாமல் கொழும்புக்கு கொண்டு இனவெறித் தீக்கு பெற்றோல் ஊற்றியது சிங்கள பேரினவாத தலைமை.

இனப்படுகொலைக்கான திட்டமிடுதல் என்பன ஏற்கனவே சிங்கள பேரினவாத தலைமையால் நன்கு திட்டமிடப்பட்டு நாள் குறிக்கப்படாமல் இருந்ததாலும் அதற்கான பொறி ஏற்படுத்தப்பட்டது கனத்தை மயானத்தின் ரேமன் காட்சியகத்திலேயே..
விடுதலையின் முதற் பொறிகளில் முக்கியமானவைகளை சிறைக்குள்ளே வைத்து வெளியில் விடுதலையை வேட்கையை ஒழித்தழிக்க நினைத்த சிங்களத்தின் எண்ணம் நிறைவேறாததால் அவர்களை சிறைக்குள்ளேயே கலவரம் என்ற போர்வையில் அழிக்கும் திட்டம் ஆரம்பமாகியது.

எல்.பியதாச எழுதிய Sri Lanka: the Holocaust and After என்ற புத்தகத்தில் ஆதாரங்களுடன் பின்வருமாறு எழுகிறார்.’யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் யூலை 23 அன்று கொல்லப்படுவதற்கு முன்னரேயே அரசாங்கம் ஒரு இனக்கொலைக்கு நன்கு திட்டமிட்டு தயாராக இருந்தது’ என்று.
சிங்கள தேசத்தால் மிகவும் தேடப்பட்ட தமிழ் போராளிகளை அடைத்திருந்த சிறை வெலிக்கட.

இரவு பகலாக 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஒரு ராணுவ பிளட்டூனுக்கும் அதிகமான ராணுவத்தினர் சிறைவாசலில். சிறைச்சாலைக்கு காவலாக இனவெறியன் லெப்.மகிந்த கித்ருசிங்கா அந்தநேரம். (இவனே இப்போது மேஜர் ஜெனரலாக சிங்கள ராணுவ உயர்பீடத்தில் இருப்பவன்)
சிறைக்குள் எந்த நேரமும் சிறை எஸ்பி தர உத்தியாகத்தர்களின் கண்காணிப்பில் நன்கு மூடப்பட்ட செல்கள்.

இன்னும் ஒரு திட்டமிடல் என்னவென்றால் சிறைச்சாலைக்கு உள்ளே ஜே.ஆரின் தொகுதியை சேர்ந்தவனும் அவரின் வெற்றிக்காக உழைத்தவனுமாகிய களனியை சேர்ந்த ரோஜர் ஜெயசேகரா அன்று சிறைச்சாலை கடமையில் வலிந்து உள்நுழைக்கபடுகிறான். இவன் ரணில் விக்ரமசிங்கா, சிறில் மத்தியு போன்றோரின் வலதுகை.
சேபால எட்டிகல போன்ற தமிழினவிரோதிகள் திட்டமிட்டு வெலிக்கட சிறையின் சேப்பல்பகுதிக்கு மாற்றப்படுகிறார்கள். இந்த சேபால ஏட்டிகலதான் அல் இத்தாலிய விமானத்தை கடத்தி சிங்கள கதாநாயகனாக விளங்கியவர் .முழு தமிழ் இனவிரோதியான இவனுக்காக வாதிட்டவர் பொதுவுடமை வாய்கிழியப்பேசும் கொல்வின் ஆர்டி சில்வா தான்.) இவை சிறைக்குள்ளே தமிழ் கைதிகள் வைக்கப்பட்டிருந்த நிலை.

வெளியில், சிங்களதேச காவல்துறை தலைவரான ருத்ராராஜசிங்கம் இந்த நேரம் பார்த்து நுவரேலியாவுக்கு உத்தியோக விஜயம். பாதுகாப்பு செயலக கூட்டம் அதே நேரம். மூத்த டிஐஜி சுந்தரலிங்கம்கூட கடமையில் இல்லை. சிங்கள இனவாத அரசு நினைத்தபடியே வெளியே ஏற்படுத்திய அசாத்திய நிலையை பயன்படுத்தி சிறைக்குள்ளே இனப்படுகொலையை செயற்படுத்த ஆரம்பித்தது.

மிகவும் கடுமையான காவலுடன் வைக்கப்பட்டிருந்ததாக சிங்களம் வெளியே பிரச்சாரம் செய்த தமிழ் போராளிகளின் செல்களுக்குள் சிங்களகாடை கைதிகள் மிகவும் இலகுவாக புகுந்து இனக்கொலையை ஆரம்பித்தனர். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக மானுடம் இதுவரை அறிந்திராத வன்மத்தை சிங்களம் அவர்களமேல் காட்டியது. இந்த போராளிகளின் காவலுக்கு என்று நிறுத்தப்பட்டிருந்த லெப்.மகிந்த கித்ருசிங்க தலைமையிலான ராணுவபடை எதுவுமே செய்யாமல் இனக்கொலையை கைகட்டி நின்று பார்த்தது மட்டும் இல்லாமல் காயமடைந்தவர்களை சிறைச்சாலையில் இருந்து மருத்துவமனை கொண்டு செல்வதைகூட அனுமதிக்க மறுத்து எல்லோரும் இறக்கும்வரை வேடிக்கை பார்த்தது.

இதனை பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் டிஐஜி சுந்தரலிங்கம் பாதுகாப்பு செயலக கூட்டத்துக்கு போய்விட்டார். அவர் வந்த பின்னரே மறுநடவடிக்கை என்று தட்டிகளிக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதியின் செயலர் பிரட்மன் வீரக்கோனின் சாட்சியத்தின்படி அந்நேரம் ஜனாதிபதி ராணுவ தளபதியின் கட்டுபாட்டு அறைக்குள் இருந்தார் என்று சொல்லி இருக்கிறார். ராணுவத்தினர் இதில் தலையிடவேண்டாம் என்ற தகவல் அங்கிருந்தே எங்கும் அனுப்பபட்டது.

வெளியே நடக்க ஆரம்பித்த இனப்படுகொலையின் அங்கம்தான் வெலிக்கட சிறைக்குள் யூலை 25, 28ம்திகதிகளில் நடாத்தப்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும் பங்குபற்றலும் அதில் முழுமையாக இருந்தது. வெளியே வாசலில் ராணுவம் அதற்கு முழு ஆதரவாக நின்றிருந்தது. இத்தனைக்குள்ளும் எமது விடுதலைக்காக புறப்பட்ட அந்த வீரர்கள் கோழைத்தனமாக கொல்லப்பட்டார்கள். இதனை ஒரு சிறைச்சாலை கலவரம் என்றும் கைதிகளின் சண்டை என்றும் சிங்களம் மூடி மறைத்தாலும் இதுவும் இனக்கொலையின் ஒரு அங்கம்தான். எமது விடுதலைக்காக முற்றிலும் இருள் நிறைந்த காலப்பகுதியில் எழுந்த இந்த முன்னோடிகளை அழித்துவிட்டால் எல்லாம் ஓய்ந்துவிடும் என்று சிங்களத்தின் நினைப்பு தவிடுபொடியாக வைப்பதுதான் இந்த போராளிகளுக்கான உண்மை அஞ்சலி ஆகும்.
அவர்களின் கனவு தமிழீழம்.

அவர்கள் தமது தலைக்கு பின்னே தூக்குகயிறு தண்டனை தொங்கியபோதுகூட தமிழீழம், சுதந்திரம் என்றே உரத்து பிரகடனம் செய்தவர்கள்.

தொடர்ந்தும் தமிழீழம் என்ற இலட்சியத்துக்காக சோர்வின்றி பயணிப்பதுதான் அவர்களுக்கான நன்றியாகும்.

Tags: , ,

Leave a Reply