கருக்கலைப்பின்போது பெண் மரணம்: போலி பெண் மருத்துவர் கைது!

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவி அரிஜன காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி வனிதாமணி (37). இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வனிதாமணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். 5 மாத கர்ப்பமாக இருந்த அவர் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தார். இதற்காக வடசித்தூரில் உள்ள யேகோவாநிஷி ஆயுர் வேதிக் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையை அணுகினார். இந்த மருத்துவமனையை முத்துலட்சுமி என்பவர் நடத்தி வந்தார். அவருக்கு துணையாக சித்தா மருத்துவம் படித்து வரும் முத்துலட்சுமியின் மகன் கார்த்திக் (27) இருந்து வந்தார். அங்கு சென்ற வனிதாமணிக்கு முத்துலட்சுமியும், கார்த்திக்கும் கருக்கலைப்பு ஊசி போட்டனர். இதில் வனிதாமணி உடல் நிலை மோசமானது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் முத்துலட்சுமி போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. அவர் ஆயுர் வேதம் தொடர்பாக எந்த படிப்பும் படிக்கவில்லை என்பதும், அவர் ஆயுர் வேதம் படித்ததாக கூறி சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.

வனிதாமணி இறந்ததை தொடர்ந்து முத்துலட்சுமியும், அவரது மகன் கார்த்திக்கும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வடசித்தூரில் முத்துலட்சுமி நடத்தி வந்த ஆயுர்வேத மருத்துவமனைக்கு சுகாதார துறை அதிகாரிகள் சீல் வைத்த போது எடுத்த படம். அவர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி தலைமையில் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் ஆகியோர் அடங்கிய 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வடசித்தூரில் உள்ள முத்துலட்சுமியின் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். அப்போது மருத்துவமனையின் பின்புறம் ஊசிகள், சிரஞ்சு, மாத்திரைகள், பாட்டில்கள் ஆகியவை கிடந்தது.

எனவே அவர் அலோபதி டாக்டர்கள் பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளையும் பயன்படுத்தி உள்ளது தெரிய வந்தது. முத்துலட்சுமி டி.ஏ.எம்.எஸ். என்ற படிப்பு படித்து உள்ளதாக கூறி வந்துள்ளார். ஆனால் அப்படி ஒரு படிப்பு இல்லை என குடும்ப நலத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா கூறினார். மேலும் கருக்கலைப்பில் பலியான வனிதாமணி வீட்டிற்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே போலி பெண் டாக்டர் முத்துலட்சுமி நாகப்பட்டினத்தில் உள்ள தனது தோழி வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று இரவு அங்கு விரைந்து சென்ற நெகமம் தனிப்படையினர் முத்துலட்சுமியை கைது செய்தனர். அவரை நெகமம் அழைத்து வந்தனர். அங்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முத்துலட்சுமியின் மகன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்கும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு உள்ளனர். முத்துலட்சுமி கடந்த 15 ஆண்டுகளாக வடசித்தூர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். 2018-ம் ஆண்டு மாவட்ட மருத்துவ அலுவலர்கள் சோதனை நடத்த வந்த போது அவர் தப்பி ஓடி விட்டார்

இதனால் சில மாதங்களாக மருத்துவமனை செயல்படாமல் இருந்தது. அதன் பின்னர் செயல்பட தொடங்கியது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஒரு கர்ப்பிணி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. எனவே போலி டாக்டர்களை கண்டறிந்து சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடசித்தூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!