இலங்கையின் உள்நாட்டுப் போரில் சிக்குண்டு உயிர் பிழைத்தவர்கள் ஐ.நா. விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதைத் தடுப்பதற்காகவே அரசு தமது செயற்பாடுகளைக் குழப்புகின்றது என்று அரச சார்பற்ற அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதுகுறித்து ரொய்ட்டர் செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்து கடந்த மார்ச் மாதம் ஐ.நா. இலங்கைக்கு எதிராக தீர்மான மொன்றை நிறைவேற்றியது.
இது அரசை சீற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. இதற்கு ஒத்துழைக்கப் போவதில்லை, விசாரணையாளர்களுக்கு விஸா வழங்கப் போவதில்லை என அது தெரிவித்து வருகிறது.
இவ்வாறான ஒரு சூழ்நிலை யில் ஐ.நா. மனித உரிமை அமைப்புகளையும், ஊடகவியலாளர்களையும், இராஜ தந்திரிகளையும் முக்கியமான தகவல்களுக்காக நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அரச சார்பற்ற அமைப்புகள் செய்தியாளர் மாநாடுகளை, செயலமர்வுகளை நடத்துவதை பாதுகாப்பு அமைச்சு தடைசெய்துள்ளது. காடையர் கும்பல்கள் பல கூட்டங்களை குழப்பியுள்ளன.
அரச ஆதரவுடனேயே இவ்வாறான செயற்பாடுகளில் அந்த கும்பல்கள் ஈடுபடுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்தக் கும்பல்களுக்கு அரச ஆதரவுள்ளது. போர்க் குற்றங்களுக்குச் சார்பாக சாட்சியமளிப்பதை தவிர்ப்பதே முதல் நோக்கம் என மாற்றுக் கொள்கை நிலையத்தின் குசால் பெரேரா தெரிவித்தார்.
திங்கட்கிழமை கொழும்பில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்கள் அனுபவத்தை மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இராஜ தந்திரிகளுக்கும் எடுத்துக்கூறிக்கொண்டு இருந்தவேளை உள்ளே புகுந்த சிங்கள பெளத்த பிக்குகள் இந்த நிகழ்வைக் குழப்பினர்.
தமிழ் மக்கள் மேற்குலகிற்கு காசுக்காக நாட்டை விற்பதாக துரோகம் செய்வதாக குற்றம்சாட்டினர். பொலிஸார் தங்களால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியாது எனத் தெரிவித்து நிகழ்ச்சியை நிறுத்தினர். அங்கு பல வெளிநாட்டு தூதுவர்கள் காணப்பட்டனர்.
அமெரிக்கா இதனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சு இராஜதந்திர வட்டாரங்களை சேர்ந்த சிலர் தமிழர்களுக்கு சார்பாக நடப்பதாக குற்றம்சாட்டியது.
மே மாதத்தில் டிரான்பரன்சி இன்டநேசனல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி வழங்கும் நிகழ்வு இதேபோன்று ஆர்ப் பாட்டக்காரர்களால் குழப்பப்பட்டது. போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த விடயமே அரசின் முக்கிய கவலைக்குரிய விடயமாக உள்ளது எனத் தெரிவிக்கும் அந்த அமைப்பின் வெலியமுன தமிழர்கள் எப்படியும் ஊடகவியலாளர்களுடன் உரையாடுவார்கள் ஊடகவியலாளர்களுக்கு தகவல் வெளியாகும் என அரசு அஞ்சுகிறது எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தக் குற்றச் சாட்டுகளை மறுத்துள்ள அமைச்சர் ரம்புக் வெல ஜனநாயகத்தின் போரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு விழிப்பாக இருக்க வேண்டி உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
















