தமிழ் மக்களை வளைத்துப் போடுகின்ற முயற்சிகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தமிழர்களிடையே ஊடுருவியுள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
வடக்கில் கால்பதிக்க முயலும்
ஜே.வி.பி.தரப்பினர்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரான அநுரகுமார திசநாயக்க ‘‘ வடக்கு மக்களும் எம்முடன் இணைந்து உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபடவேண்டும்’’ என அழைப்பு விடுவித்துள்ளமை இதைத் தௌிவாக எடுத்துக் காட்டுகின்றது.
தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களை இந்தக் கட்சி எப்போதுமே எதிர்த்து வந்துள்ளது. தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமையும் வழங்கக் கூடாது என்பதில் குறியாகவே இருந்துள்ளது. முன்பு சுனாமி பேரிடர் இடம்பெற்றபோது அதற்குப் பிந்திய மீள்கட்டுமானச் செயலணியில் விடுதலைப் புலிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இதற்கு எதிராக நீதிமன்றம்வரை சென்று புலிகளை அந்தச் செயலணியில் இருந்து நீக்கிய பெருமையை இந்தக் கட்சி கொண்டுள்ளது. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததும் இந்தக் கட்சிதான் என்பதை எவருமே மறந்துவிட முடியாது. இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இனவாதத்தைக் கக்குவதிலும் முன்னணி வகித்தார்கள்.
தற்போது புதிய கட்சியொன்றை அமைத்து அதன் தலைவராக இருக்கும் விமல் வீரவன்ச ஒரு கடைந்தெடுத்த இனவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இவர்கூட ஜே.வி.பியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அநுரகுமார திசநாயக்க தம்முடன் இணைந்து செயற்படுமாறு தமிழர்களை அழைப்பது அவரது சுயநலத்தையே காட்டுகின்றது. தமிழர்களின் வாக்குகளைக் கவர்கின்ற கபடத்தனத்தையும் இது எடுத்துக் காட்டுகின்றது. இவரது மாய வலையில் சிக்கிக் கொள்ளாது தமிழர்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே வடக்கில் கடை விரித்துள்ள
கொழும்பின் முக்கிய அரசியல் கட்சிகள்
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் வடக்குக் கிழக்கில் கணிசமான வாக்குகளைப் பெற்றன. சில சபைகளின் ஆட்சிப் பொறுப்பும் அவற்றுக்குக் கிடைத்தன. தமிழ்க் கட்சிகளின் எதிர்காலத்துக்கு இவை நல்லதாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாது, தமிழ்ப் பிரதேசங் களில் பேரினவாதிகள் ஊடுருவுவதற்கும் இது வழிகோலிவிடும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தமிழர் பகுதிகளில் முன்னிலைப்படுத்துவதில் தமிழர்கள் சிலரே தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்ற இவர்கள், சில உதவிகளைச் செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர்.இவர்களின் பசப்பு வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் இவர்களுக்குப் பின்னால் அலைந்து திரிவதையும் காணமுடிகின்றது.
ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து அமைந்துள்ள அரசு, தமிழர்களின் பிரச்சினைகளுக் குத் தீர்வு கண்டதா? என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை. மாறி மாறி ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு கட்சிகளும் தமிழர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றியே வந்துள்ளன. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கும் இந்தக் கட்சிகள்தான் பொறுப்புக் கூறவேண்டும். இந்த நிலையில் தமிழர்கள் தேசியக் கட்சிகளை ஆதரித்து நிற்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தேர்தல்களில் தமிழர்கள் தமது பேதங்களை
கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்
உள்ளூராட்சித் தேர்தல் போன்று ஏனைய தேர்தல்களிலும் தமிழர்கள் பொறுப்பில்லாத வகையில் நடந்து கொண்டால் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டுவிடும் என்ற உண்மையை எம்மவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
மகிந்தவின் ஆட்சிக்கு ஆள்களைச் சேர்க்கின்ற கைங்கரியத்திலும் எம்மவர்களில் சிலர் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது. இவர்கள் இனவுணர்வு என்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். இனத்தை விற்றுப் பிழைப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். எட்டப்பனையும், காக்கை வன்னியனையும் இவர்களோடு ஒப்பிட்டுக் கூறமுடியும்.
தமிழர்களிடையே ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். அரசியல் ரீதியில் அவர்கள் பிரிந்து நிற்கலாம். ஆனால் தமிழ் மக்கள் அந்நிய சக்திகளிடம் சரணடைவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தமிழர் பிரதேசங்களில் கடைவிரித்துத் தமது வியாபாரத்தை நடத்துவதற்கான அறிகுறிகள் மிகத் தௌிவாகத் தெரிகின்றன. இதை நாம் அனுமதிப்பதால் எமது எதிர்காலச் சந்ததிக்கே பெரும் பாதிப்பு ஏற்படுமென்பதை இவர்கள் உணராது விடுவார்களாயின் அதைவிட வேறொரு முட்டாள்த்தனம் இருக்கவே முடியாது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!