இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலம் இது இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக நாமும் வெளியிட முடியாது, இந்தியாவும் வெளியிடமாட்டாது.
நாமும் அதனைப் பின்பற்றி மிக அவதானமாக செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அ. அமிர்தலிங்கத்தின் 86 வது ஆண்டு பிறந்த நாள் நிகழ்வை நினைவு கூரும் வகையில் வலி. வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்:-
உலக நாடுகளின் இராஜதந்திரப் போக்குகளை நாம் புரிந்து கொண்டு செயற்ப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த வகையில் இந்தியாவினுடைய இராஜதந்திரப் போக்குளையும் மற்றும் அதனுடைய செயல்பாடுகளையும் உணர்ந்து செயற்ப்பட வேண்டியதும் அவசியமாகும்.
















