ஈபிடிபியின் மகேஸ்வரி பவுண்டேசன் அமைப்பின் டிப்பர் வாகனமொன்று புத்தூர் நவக்கிரிப் பகுதியில் வீதியால் சென்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது மோதியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் கோபமுற்ற ஊர்மக்கள் அந்த டிப்பரைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். எனினும் வாகனச்சாரதி தாக்குதலாளிகளிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். அத்துடன் வீதியை தடை செய்து ஈபிடிபிக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தது.
இந்த விபத்தில் க.சுபாசினி (வயது 25) என்ற கர்ப்பிணிப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பாக ஈபிடிபியினரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை துரத்த முற்பட்டனர்.
எனினும் அவர்களும் முரண்பட பதற்றமான சூழல் நிலவியது.தீயினை கட்டுப்பாட்டினுள் கொண்டவர காவல்துறை முற்பட்ட போதும்; டிப்பர் முற்றாக எரிந்து நாசமாகியிருந்தது. சம்பந்தப்பட்ட சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
வடமராட்சி கிழக்கிலிருந்து மணல் ஏற்றிவந்த ரிப்பரொன்றே மோதி கர்ப்பிணியை கொன்றுள்ளது.
















