இரும்புச் சங்கிலியால் கட்டி நதியில் இறக்கப்பட்ட மாயாஜால நிபுணர் தண்ணீரில் மூழ்கி பலி!

மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் சாஞ்சல் லகிரி (வயது 41). இவர் தன்னை ‘மேஜிக் நிபுணர் மாண்ட்ரேக்’ என அறிவித்து பல்வேறு சாகசங்களை செய்து வந்தார். அந்தவகையில் மேற்கு வங்காளத்தின் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் மேஜிக் நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நடத்தினார். அதன்படி அவருடைய கை, கால்களை கயிறு மற்றும் இரும்புச் சங்கிலியால் கட்டி, அதை பூட்டு போட்டு பூட்டி, பாலத்துக்கு கீழே செல்லும் ஹூக்ளி நதியில் கிரேன் மூலம் இறக்கினர்.

அடுத்த சில நிமிடங்களில் சங்கிலி கட்டுகளை அறுத்துக்கொண்டு ஆற்றுக்கு மேலே வருவேன் என அறிவித்து இந்த ஆபத்தான சாகசத்தில் சாஞ்சல் லகிரி இறங்கினார். இதுபோன்ற சாகசங்களை ஏற்கனவே பலமுறை அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தமுறை ஹூக்ளி நதியில் இறக்கி நீண்ட நேரமாகியும் அவர் ஆற்றுக்கு மேலே வரவில்லை. இதனால் அவரை எதிர்பார்த்து பாலத்துக்கு மேலே காத்திருந்த அவரது பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கொல்கத்தா போலீசாரும், உள்ளூர் மக்களும் இணைந்து சாஞ்சல் லகிரியை ஆற்றில் தேடி வந்தனர். இந்தநிலையில் சாஞ்சல் லகிரி இறந்த நிலையில் அவரது உடல் ஆற்றில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மீட்கப்பட்டது. ஆற்றில் இறக்கப்பட்டபோது கை, கால்கள் கயிறு மற்றும் இரும்பு சங்கிலிகளால் இறுக்க கட்டப்பட்ட நிலையிலேயே அதை அவிழ்க்க முடியாமல் மேஜிக் நிபுணர் சாஞ்சல் லகிரி தண்ணீரில் மூழ்கி பலியானதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!