அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ம் ஆண்டு ஜனவரி முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம் ஜனவரி மாதம் 7ம் திகதிக்கும் 11ம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில் தேர்தல் நடைபெறும் என்றும், பெரும்பாலும் 8ம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்றும் குறித்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நவம்பர் 20ம் திகதி அறிவிப்பார் என்றும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நான்கு வருடங்கள் நவம்பர் 19ம் திகதியுடன் நிறைவடைகின்றன. ஜனாதிபதி தேர்தலை 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதிப்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்திருந்த நிலையில், பாப்பரசர் பிரான்சிஸ், ஜனவரி மாதம் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதனால் அவருடைய வருகைக்கு முன்னரே தேர்தலை நடத்தி முடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவாக மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட வேலைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
















