தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என இந்திய அரசிடம் காட்டிக் கொடுக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை, கோரிக்கை, காலக்கெடு எனும் கபடத்தனமான நாடகங்களை அரங்கேற்றி வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தமையால், அதனைத் தட்டிக் கழிக்க முடியாத தமிழ்க் கூட்டமைப்பு, நிபந்தனை என சில கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை குழப்ப முயன்றுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என இந்திய அரசிடம் காட்டிக் கொடுக்கவே தமிழ்க் கூட்டமைப்பு நிபந்தனை, கோரிக்கை, காலக்கெடு எனும் கபடத்தனமான நாடகங்களை அரங்கேற்றி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனக் கூறியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கே நிபந்தனை விதிப்பது வியப்பைத் தருவதாகவும், அரசாங்கத்திற்கு தமிழ்க் கூட்டமைப்பு அல்ல எவரும் நிபந்தனைகளையோ அல்லது காலக்கெடுவையோ விதிக்க முடியாது எனவும் அவர் கூறினார். அரசாங்கம் அன்று போலவே இன்றும் தமிழ் மக்களது பிரச்சினைக்களுக்கு தீர்வு காணும் விடயத்தில் திறந்த மனதுடன் வெளிப்படையாக இருந்து வருகிறது. இதனை ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தியுள்ளார் எனவும் அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது போன்று தமிழ் கூட்டமைப்பு எம்முடன் பேசியே எந்தவொரு தீர்வையும் காண வேண்டும். அதுவே யதார்த்தம். அதனை மோடி அவர்கள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு நன்கு புரிய வைத்துள்ளார்.
அதற்காக பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன். ஆனால் இதனை மறைத்து தமிழ்க் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். எமக்கே நிபந்தனை விதிக்கின்றனர். இன்னும் எத்தனை காலத்திற்கு என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதே அவர்கள் எமது வழிக்கு வந்து விட்டார்கள். இன்னும் சிறிது காலத்தில் முழுமையாக வந்துவிடுவார்கள் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
















