மனித உரிமைகள் மற்றும் பெண் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரான மறைந்த டொக்டர் ராஜினி திராணகம அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ். ரிம்மர் மண்டபத்தில் இன்றுமுற்பகல் ராஜினி திராணகம நினைவு ஏற்பாட்டுக் குழுவினரால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவுதின நிகழ்வில் தென்னிலங்கை உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மூவின மக்களும் பெருமளவில் வந்து கலந்துகொண்டிருந்தார்கள்.
அமரர் ராஜினி திராணகம (ராஜினி ராஜசிங்கம் திராணகம) அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட உடற் கூறியல் விரிவுரையாளராகவும், அப்பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதுடன், உடற் கூறியல் துறையில் இங்கிலாந்தில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர். 90களில் வெளியிடப்பட்ட முறிந்த பனை என்கின்ற ஆங்கில நூலை எழுதியவர்களுள் ஒருவரான இவர், மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினை ஆரம்பித்தவர்களுள் ஒருவராவார்.
80களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு பின்பு ஆயுதப் போராட்ட செயற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் கண்டு அதிலிருந்து விலகி, மனித உரிமைகள் மற்றும் பெண் விடுதலை தொடர்பிலான செயற்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
















