முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான வகையில் டிவிட் செய்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும், மீனவர் பிரச்சினை குறித்தும் அவதூறாக தொலைக்காட்சி, மற்றும் அச்சு ஊடகங்களில் பேட்டியளித்ததற்காக ஜெயலலிதா சார்பில், பாஜகவில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமி மீது 3 அவதூறு வழக்குகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளால் சுப்பிரமணியன் சுவாமி, முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த கோபத்தில் இருப்பார் போலும். இன்று காலையிலேயே டிவிட்டரில் அவரது கோபத்தை கொட்டி தீர்த்துள்ளார். ஆனால், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசின், முதல்வர் பதவியில் உள்ளவர் ஜெயலலிதா என்ற மரியாதை இன்றி, ஏதோ தனிப்பட்ட நபரை திட்டுவதை போல அவர் கீச்சிட்டுள்ளதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த டிவிட்டின் முதல் வரி, ஜெயலலிதாவுக்கு சிறைதான் என்று கூறுகிறது. அதற்கு பிறகு எழுதியுள்ளதுதான் அநாகரீகத்தின் உச்சமாக உள்ளது. விலங்குகளை ஒப்பிட்டு தமிழில் கூறப்படும் பழமொழிகள் இரண்டை, ஜெயலலிதாவுக்கு உதாரணமாக கூறி டிவிட் செய்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
7 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலோவர்களை வைத்துள்ள சுப்பிரமணியன் சுவாமி இப்படி ஒரு கீச்சை வெளியிட்டிருப்பது மீண்டும் ஒரு அவதூறு வழக்கை நோக்கி அவரை இழுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தாங்கள் பெரிதும் மதிப்பு வைத்துள்ள, அம்மா என்று அழைத்து பெருமைபடுத்தும் தலைவரான ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்தை வெளியிட்ட சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக, அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் அணி திரள வாய்ப்புள்ளது.
















