ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அமெரிக்கா பயணமானார்.
ஜனாதிபதியுடன் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ் குணவர்தன. ஏ. எச். எம். அஸ்வர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரேணுகா செனவிரத்ன உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் நேற்று அமெரிக்கா வுக்குப் பயணமாகினர்.
ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் பொது அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி அவர்கள் அங்கு தங்கியிருக்கும் காலங்களில் ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகத் தலைவர்கள் பலரையும் சந்தித்து இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வாரென ஜனாதிபதியின் பேச்சாளர் கலாநிதி மொஹான் சமரநாயக்க நேற்றுத் தெரிவித்தார்
















