ஐந்து நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயனம் செய்துள பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரம் தொடர்பாக விளக்கமளிக்கும்படி அவருக்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள குடிமக்கள் பல வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்த இந்த வழக்கிற்காக பிரதமர் அமெரிக்கா பயணம் செய்யும் இந்த நேரத்தில் அவர் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு வெளியே நிகழும் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் உள்ள நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திரமோடிக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அமெரிக்க நீதித்துறை மையம் (ஏடிசி) என்ற மனித உரிமைகள் அமைப்பும், குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டதாக கூறிவரும் இரண்டு நபர்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான உத்தரவு ஒன்றை நியூயார்க் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.
குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல், சட்டத்துக்கு புறம்பான வகையில் படுகொலை, மன ரீதியாவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றங்களில் மோடி ஈடுபட்டதாக தங்களது 28 பக்க மனுவில் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் நிகழ்ந்தபோது, அந்த மாநில முதல்வராக மோடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மோடியின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க், வாஷிங்டனில் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன.
















