வேலையில் சேர்ந்த முதல் நாளே இளம்வயது டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மன்யகுமார் வைத்யா(வயது 26). இவர் தனது மருத்துவ கல்வியை முடித்து பணி ஆணைக்காக காத்திருந்தார். அவருக்கு மகராஷ்ரா மாநிலம், நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிய கடந்த மே இரண்டாம் தேதி பணி நியமன ஆணை அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, சமீபத்தில் நாக்பூர் சென்ற மன்யகுமார் அங்குள்ள மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியவாறு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், பயிற்சி முடிந்து புறநோயாளிகள் பிரிவில் மருத்துவராக இன்று அவர் தனது முதல் நாள் பணியை தொடங்குவதாக இருந்தது. ஆனால், அவர் இன்று காலை மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மருத்துவர்கள் மன்யகுமார் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்றனர்.

அப்போது தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டு மன்யகுமார் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தூக்கில் தொங்கிய மன்யகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!