இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சரணடைய முயற்சித்தனர் என வட மாகாணசபையின் உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஆனந்தி சசிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் படையினரிடம் சரணடைவது குறித்து கவனம் செலுத்தியதாக அனந்தி ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி ஏந்தி எந்தவொரு விடுதலைப் புலி உறுப்பினரும் படையினரிடம் சரணடையவில்லை என அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்திருந்தார்.
சசிரேகா பிரான்ஸின் பாரிஸ் நகரில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிரேகாவின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் ஆனந்தி சசிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். சில உறுப்பினர்களை சரணயைடச் செய்வது குறித்து சிரேஸ்ட புலி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கலந்தாலோசித்து வந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாக, அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனை சந்திக்க இருப்பதாகவும், சரணடைவது குறித்து பேச உள்ளதாகவும் தம்மிடம் எழிலன் குறிப்பிட்டார் என சசிரேகா தெரிவித்திருந்தார்.
சசிரேகா யுத்த நிறைவிற்கு முன்னதாகவே சரணடைந்து விட்டார் எனவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி சசிரேகா அறிந்திருக்க வாய்ப்பு கிடையாது எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
















