பிரிட்டனுக்கான தூதுவர் கிறிஸ் நோனிஸ் மீது தாக்குதல் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவை ஜனாதிபதி ஓங்கி அறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் அமெரிக்கப் பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸை பலர் முன்னிலையில் ஓங்கி அறைந்திருந்தார்.
எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழுந்த கிறிஸ் நோனிஸை பல தடவைகள் சஜின் வாஸ் காலால் எட்டி உதைத்திருந்தார். இதன் காரணமாக அவமானத்துக்குள்ளான கிறிஸ் நோனிஸ் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். இந்தச் சம்பவம் ஊடகங்களில் கசிந்து அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கிறிஸ் நோனிஸ் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். நாடு திரும்பியவுடன் சஜின் வாஸ் குணவர்த்தனவை அலரி மாளிகைக்கு வரவழைத்து கடுமையாக திட்டியுள்ளார். ஒருகட்டத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஜனாதிபதி கைநீட்டி சஜின் வாஸை பலமாக அறைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ள கிறிஸ் நோனிஸை சமாதானப்படுத்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் லண்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனையடுத்து சமாதானமடைந்துள்ள கிறிஸ் நோனிஸ், தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
















