அதிமுகவினர் யாரும் என்னைப் பார்க்க சிறைக்கு வர வேண்டாம். தமிழக மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தகவலை ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறையில் ஜெயலலிதா யாரையும் பார்ப்பதில்லை என்றும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரைக் கூட இதுவரை நான்கு முறை மட்டுமே அவர் பார்த்துள்ளதாகவும் சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ஜெயலலிதா சிறையில் அமைதியாக தனது நாட்களைக் கழித்து வருகிறார். யாருடனும் அவர் தேவையில்லாமல் பேசுவதில்லை. சிறை வளாகத்தில் தசரா கொண்டாட்டங்கள் நடந்தன. அதில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. தனது சிறை அறையிலேயே இருந்தார். சிறை அறையில் தனக்கு வழங்கப்படும் செய்தித் தாள்களை மட்டும் அவர் படித்து வருகிறார். தன்னை வந்து யாரும் சந்திப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை. அரசியல் தலைவர்கள், தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சியினர் என யாரையும் சந்திக்க அவர் விரும்பவில்லை.
சிறையில் அடைக்கப்பட்ட செப்டம்பர் 27ம் தேதி வரை இதுவரை நான்கு முறை மட்டுமே அவர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரைச் சந்தித்துள்ளார். தமிழக மக்கள் அமைதி காக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கட்சியினர் யாரும் தன்னை சந்திப்பதற்காக பெங்களூருக்கு வருவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மைசூர் சாமுண்டேஸ்வரி படத்தை கேட்டு வாங்கி வைத்துள்ளார். அதை காலையும், மாலையும் அவர் வணங்கி வழிபட்டு வருகிறார்.
ஜெயலலிதாவின் உடல் நலம் மிக சிறப்பாக உள்ளது அவருக்கு தினசரி 3 முறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. மருத்துவர்கள் விஜயக்குமார், சாந்தராமன் ஆகியோர் பரிந்துரைக்கும் உணவுகள் வழங்கப்படுகின்றன. முதலில் காலையில் வாக்கிங் போய் வந்தார். தற்போது அதை நிறுத்தி விட்டார். சிறை அறையை விட்டு வெளியேறுவதில்லை. சிறையில் தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று எந்த சலுகையையும் ஜெயலலிதா கேட்பதில்லை. யாருடைய உதவியையும் கூட அவர் கேட்பதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
















