தமிழகத்தில், ஜெயலலிதாவின் விடுதலையை வலியுறுத்தி, அக்கட்சியினர், சினிமாத்தனமாக, தொடர்ந்து மக்களை பிரச்னைகளுக்கு ஆளாக்கிவருகின்றனர். இது மறுபடியும் தொடர்ந்தால்,அதை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வேன். தமிழகத்தில் 356 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, அ.தி.மு.க., அரசை கலைக்கக் கோருவேன் என்று பாஜகவின் சுப்ரமணியசுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் நால்வருக்கும் ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜெயலலிதா சிறைக்குப் போன நாள் முதல் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராடி வருகின்றனர். இது குறித்து கருத்து கூறியுள்ள சுப்ரமணியசுவாமி, அதிமுகவினர் சினிமாத்தனமாக போராடுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவரும், தமிழக சட்டம் – ஒழுங்கை காப்பதில், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைப்பது, என் எண்ணம் அல்ல. அதற்காக ஒரு அரசு, மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல், தொடர்ந்து ஒரு குற்றவாளியின் விடுதலைக்காக, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்தால், அதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது.
ஜெயலலிதாவை கடவுளாக நினைத்து, அவர் கட்சியினர் இன்னமும் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றனர். அவர் ஊழல் வழக்கில் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கும் ஒரு ஊழல்வாதி என்பதை, அக்கட்சியினர் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுளுக்கு மனிதன் தண்டனை வழங்குவது தவறென்றால், அ.தி.மு.க.,வினர் தங்கள் கடவுளாக நினைக்கும் ஜெயலலிதா ஏன் ஊழல் புரிய வேண்டும்?
அவர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சொத்து சேர்த்தார் என்பதை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டது.அப்படி இருக்கும்போது, ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் மற்றவர்களுக்கும் அவ்வளவு எளிதாக, ஜாமின் கிடைத்து விடாது.
கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள் என, பலரும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அதனால் தான், ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என, நான் கூறினேன்.
சட்டம், அவர் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பலவீனமாக இல்லை என்பதை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திசேகரா, ஜாமினை மறுத்து, தெளிவாக சொல்லிஇருக்கிறார்.
குற்றவாளிகளுக்கு கேட்டதும் ஜாமின் கொடுக்க வேண்டும் என்பது, குற்ற வழக்கில் அடிப்படை உரிமை அல்ல என்பதை ஜெயலலிதா இப்போது புரிந்து கொள்ள வேண்டும்.
லாலு பிரசாத் யாதவ், சுக்ராம், மதுகோடா, ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றவர்களின் ஊழல் வழக்கில், எல்லாருக்கும் அவ்வளவு எளிதாக ஜாமின் கிடைத்து விடவில்லை.
நீதிபதி குன்ஹா, தெளிவான ஒரு தீர்ப்பை கொடுத்த பின்னாலும், அதை கருத்தில் கொள்ளாமல் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தால், நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு பிடிப்பில்லாமல் போயிருக்கும் என்று கூறியுள்ளார்
















