பொருளாதார நிலை மாற்றத்தை ஊக்குவித்து கூடுதல் திறன் விருத்தி செயற்பாட்டை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்ட சந்திப்பு செவ்வாய்கிழமை (10) வவுனியா நெல்லி ஸ்ரார் விடுதியில் இடம்பெற்றது.
வூஸ்ஃக் நிறுவனத்துடன் சர்வோதயம், ஓகான், வைகிறோ போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வவுனியா, கிளிநெச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பொருளாதார நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விருந்தோம்பல் முகாமைத்தும், உல்லாசத்துறை, கட்டட நிர்மானத்துறை, இயந்திரவியல், தகவல் தொழினுட்பம் ஆகிய துறைகளில் இளைஞர்களை உள்வாங்கி அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடனே குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்ட துறைகளுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்களின் உயர்மட்ட உரிமையாளர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். தமது நிறுவனங்களுக்கு தேவையான துறைசார்ந்த தொழிலாளர்களை பயிற்றுவிப்பதற்கும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் முன்வந்தனர்.
இவ் ஒன்று கூடலில் கனேடிய தூதிரகத்தின் பிரதிநிதி உட்பட சர்வோதய வடமாகாண இணைப்பாளர், மற்றும் மாவட்ட இணைப்பாளர், ஓகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் வைகிறோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் உட்பட பலரும் பங்குபற்றி இளைஞர்களின் மூலம் பொருளாதார நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட செயற்பாடுகள் ஆரம்பித்து வைத்தனர்.
















