மானியம் வழங்கும் முறையில் மாற்றம்: அவதிப்படும் இலங்கை அகதிகள்

lankan-tamilமாதாந்த மானியம் அளிப்பதில் புதிய விதிமுறை மாற்றத்தால் தமிழகத்தின் தோப்புக் கொல்லை முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அகதிகள் சிரமத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 1990 ம் ஆண்டில் இலங்கையில் நடந்த உள்நாட்டு பிரச்சினையால், நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையில் உலக முழுவதும் பல நாடுகளுக்கு இலங்கை தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு புலம் பெயர்ந்தனர்.

அதில் கடல்வழியாக 18 கி.மீ தொலைவில் உள்ள தமிழகத்தில் அதிகமானோர் தஞ்சம் புகுந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியான கோட்டைப்பட்டிணம், மீமிசல், இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கரைசேர்ந்தனர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு அரசு, தனியாருக்குச் சொந்தமான உபயோகப்படதாத பழைய கட்டடங்களிலும் சிமெண்ட் கூரையால் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான குடிசைகளிலும் தங்கவைக்கப்பட்டனர்.

அப்போது தமிழகம்முழுதும் உருவான 150 முகாம்களில் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கி இருந்தனர். இலங்கைத்தீவில் நடந்துவந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தததால் பல ஆயிரம் பேர் மீண்டும் இலங்கைக்குச் சென்று விட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது 110 முகாம்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறங்தாங்கி தாலுக்காவில் அழியாநிலையிலும், திருமயம் தாலுக்காவில் லெனாவிலக்கிலும், ஆலங்குடி தாலுக்காவில் தோப்புக்கொல்லையிலும் அகதிகள் முகாம்கள் அமைந்துள்ளன.

அதில் அழியாநிலை முகாமில் 260 குடும்பங்களைச் சேர்ந்த 1000 -க்கும் மேற்பட்டவர்களும், லெனாவிலக்குமுகாமில் 316 குடும்பங்களைச்சார்ந்த 1100க்கும் மேற்பட்டவர்களும் தோப்புக்கொல்லை முகாமில் 450 குடும்பங்களைச் சார்ந்த 1850க்கும் மேற்பட்டவர்களும் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் குடும்பத் தலைவருக்கு 1000 ரூபாவும், 12வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 750 ரூபாவும் அதற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாவும் மானியத்தொகையாக வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மானியத்தொகை மாதத்தின் முதல் திகதி அல்லது 2 ம் திகதியில் வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் இது 10 முதல் 15-ம் திகதிவரை தள்ளி வழங்கப்பட்டது.

இதுகுறித்த முறைப்பாட்டின் காரணமாக கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் 2ம் திகதி வழங்கினர். இதில் மானியத்தொகை வழங்கும்போது அகதிகளுக்கு வழங்கிய குடும்ப அட்டைகளை வரிசையில் அடுக்கி வைத்து வழங்கப்பட்டது.

இப்படி வழங்குவதால் பொதுமக்களுக்கு வெயிலும் மழையிலும் நிற்க வேண்டிய நிலை ஏற்படாது காலையில் 8 மணிக்கு ஒரு அடையாள அட்டையை அடுக்கினால் அந்த அட்டைதாரருக்கு மாலை 2 மணி முதல் 3 மணிக்கு தொகை கிடைக்கும். இதனால் பெண்கள் வீட்டில் அன்றாட பணிகளை முடித்துவிட்டு சரியான நேரத்துக்கு வந்து தொகையைப் பெறுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது.

ஆனால், நேற்று நடைபெற்ற மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் வழக்கமான விதிமுறையை மாற்றி அட்டையை முன்னதாக எவரிடமும் வாங்காமல் அனைவரையுமே வரிசைகளில் நிற்க வைத்து மானியத்தை வழங்கினர்.

இதன் காரணமாக முகாம்வாசிகள் அனைவருமே நெடுநேரம் காத்திருக்க நேரிட்டது. மாதந்த மானியம் 1 ம் திகதியில் வழங்க வேண்டியதை மிகவும் தாமதமாக 9ம் திகதியில் வழங்கும் போதிலும் வரிசையில் நிற்க சொல்லி துயரப்படுத்துவதாக அகதிகள் புலம்பினர்.

மாவட்டத்தில் உள்ள மற்ற 2 முகாம்களிலும் 2 ம் திகதி மானியம் வழங்கப்படும் நிலையில் தோப்புக்கொல்லை முகாமில் மட்டும் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத நிலை தற்போது வந்தது எதற்காக என இம்முகாம் மக்களின் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply