தமிழீழ விடுதலைப்புலிகளை மிக மோசமாக விமர்சித்துவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுதலைப்புலிகள் தமது சுயநலன் கருதியே கடந்தகாலத்தில் செயற்பட்டதாகத் தெரிவித்து வவுனியாவில் இன்று உரையாற்றியுள்ளமை சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது.
தேர்தலில் வெற்றிபெறும் வரையில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தலைவர் அவர்களையும் சொல்லி அரசியல் பிழைப்பு நடத்திவந்த விக்னேஸ்வரன், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தொடர்பில் சாவகச்சேரியில் ஆற்றிய உரை மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தைத் தோற்றுவித்திருந்தது.
அதன் தொடராக அண்மையில் வன்முறை இயக்கங்களில் தனக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்திருந்தமை அவர் தொடர்ந்தும் என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என்பதை புலப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் கடந்தகாலங்களில் இயக்கங்களுக்கும் இராணுவத்தினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏற்றவகையிலேயே அரசியல் வாதிகள் செயற்பட வேண்டிய கட்டாயம் இருந்ததாகவும் குறித்த மூன்று தரப்பும் தமது சுயநலன் சார்ந்தே செயற்பட்டதாக வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று உரையாற்றியிருக்கின்றார்.
அவருடைய உரையில் தெரிவிக்கப்பட்ட குறித்த விடயம் வருமாறு,
“இதுவரை காலமும் எமது சூழல் வித்தியாசமானதாக இருந்தது. இயக்கத்தினரின் ஆணையை நாம் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இராணுவத்தினரின் ஆணையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. இப்போதும் நிறைவேற்ற வேண்டும் போல் தென்படுகின்றது. அல்லது ஒரு சில அரசியல்வாதிகளின் ஆணைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது தற்போது உள்ளது. இந்த மூன்று தரப்பாருமே தமது சுயநலம் கருதியே செயற்பட்டார்கள்.”
என்று தெரிவித்தார்.
ஈழவிடுதலைப்போராட்டத்துக்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் ஒவ்வொருவரும் எந்த சுயநலத்தினை அடிப்படையாகக் கொண்டு தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்கள் என்பதை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விக்னேஸ்வரன் பகிரங்கப்படுத்துவாரா? தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களை மஹிந்தராஜபக்ஷவுக்கு நிகராக விமர்சித்த விக்கினேஸ்வரன், இன்று இயக்கத்தினை இராணுவத்தினருக்கு நிகராக குறிப்பிட்டிருக்கின்றமை அவருடைய ஆள் மனதில் ஆளவேருன்றியிருக்கும் சிங்கள இனவெறி விசுவாசத்தை புலப்படுத்துகின்றது என்கின்றனர் நோக்கர்கள்.
நன்றி,
-தமிழ் லீடர்-
















