இறுதி யுத்தத்தின்போது ஏற்படுத்தப்பட்ட இலட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் பில்லியன் கணக்
கான சொத்தழிவுகளுக்கும் ஐந்தாண்டுகள் கடந்தும் நஷ்ட ஈடுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நீதியைக் கொன்று சமத்துவத்துக்கு சவக்குழி வெட்டி தனி மனித உரிமைகள் சுயகெளரவம் ஆகியவற்றைப் புதைத்து இராணுவ முற்றுகைக்குள் வாழவே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் எமது மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் அமைந்திருக்கிறது என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை அமர்வின்போது இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிவசக்தி ஆனந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்;
தமிழ் மக்களின் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த அரசாங்கம் மிகப்பெரிய மனிதப் பேரவலத்துடனேயே 2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மனித குலப்படுகொலைகள் என்பனவற்றுடன் முடிவுறுத்தப்பட்டிருக்கும் கொடிய யுத்தத்தின் பாதிப்புக்களிலிருந்து எமது மக்கள் இன்னுமே மீட்சி பெற்றிருக்கவில்லை.
இன்றைய நிலையிலும் எமது மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டுவருகிறது. எமது மக்கள் இன்றும் அகதி முகாம்களிலும் தற்காலிக கூடாரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். நெறிதவறிய இறுதி யுத்தம் எமது மக்களுக்கு ஏற்படுத்திய இழப்புகள் அழிவுகள்இ பாதிப்புகள்இ வலிகள் அவலங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பதில்கள்தான் என்ன? எமது மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு விளங்கிக்கொண்டுள்ளது.
நெஞ்சை அழுத்தும் அபத்தமான அருவறுப்பான யுத்த சம்பவங்களின் எச்சங்கள் சாட்சியங்களாகவும் துயரக் காட்சிகளாகவும் காட்சியளிக்கின்ற நிலையில் இழப்பதற்கு இனியும் தம்மிடம் எதுவுமற்றவர்களாக தமிழ் மக்கள் இருந்து வாழ்ந்துவருகின்றனர்.
இறுதி யுத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட இலட்சக்கணக்கான உயிர் இழப்புக்கள் பில்லியன் கணக்கான சொத்தழிப்புக்கள் ஆகியவற்றுக்கு யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகியும் நஷ்ட ஈடுகள் வழங்கப்படவில்லை. எமது மக்கள் பலவந்தமாக தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
மீள்குடியேற்றம் என்றதன் பேரில் தற்காலிக கொட்டகைகள் தரப்பாள் குடில்கள் சகிதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள கிராமங்கள் தற்போது பெய்துவரும் மழையில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.மேலும் மீள்குடியேற்றம் என்ற பேரில் எமது மக்கள் மனித வாழ்க்கைக்குப் பொருத்தமில்லாத பகுதிகளிலும் காடுகளை அழித்து புதிதாக ஏற்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளிலும் வெட்டவெளிகளிலும் மரநிழல் பகுதிகளிலும் அழைத்துச் சென்று இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் நீதியைக் கொன்று சமத்துவத்துக்கு சவக்குழி வெட்டி தனிமனித உரிமைகள் சுயகெளரம் ஆகியவவற்றை புதைத்து இராணுவ அடக்கு முறைக்குள்ளும் இராணுவ முற்றுகைக்குள்ளும் வாழவே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமது மக்கள் தொடர்பில் இந்த வரவு செலவுத்திட்டம் இடியாகவே விழுந்துள்ளது. எமது மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகவும் இனக்குரோத வரவு செலவுத்திட்டமாகவும் அமைந்திருக்கிறது
















