மீரியபெத்த மண்சரிவு காரணமாக தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது பெற்ற அனுபவத்தைக் கொண்டே இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை கணக்கெடுப்பின் படி 75 பிள்ளைகள் தாயையும் தந்தையையும் இழந்து நிர்க்கதியாகி நின்கின்றனர். இவர்களது உறவினர்கள் என்று சொல்வோரும், நெருங்கிய உறவினர்கள் என்று சொல்வோரும் இந்தப் பிள்ளைகளை கேட்கின்றனர். எனினும் அவர்களிடம் இப்பிள்ளைகளை ஒப்படைக்கப்படமாட்டார்கள்.
75 பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு தங்குமிட வசதிகள் உள்ளிட்ட எதிர்காலம் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்கும். எவரது அனுசரணையையும் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. எனினும் இந்தப் பிள்ளைகளுக்காக உதவி வழங்க விரும்புகிறவர்கள் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
53 வீடுகளிலுள்ள சுமார் 330 பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் எடுக்கும் சரியான தரவுகளை கூற முடியவில்லை என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் தெரிவித்தார்.
















