இந்திய அமைதி காக்கும் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் – கருணா

GotaKarunaஇந்திய அமைதி காக்கும் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

1987 மற்றும் 1990ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் தமிழர்களை கொலை செய்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொண்ட செயல்களை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாக முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண இராணுவத் தளபதியான கருணா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கடற்படையினர் தடுத்து நிறுத்தி வருவதாகவும் இது பாராட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு இலங்கை மீனவர்களின் வளங்களை பாதுகாப்பதற்கு கடற்படையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பான சில விடயங்களை அம்பலப்படுத்த நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

1989ம் ஆண்டில் 350 விடுதலைப் புலி உறுப்பினர்களே இருந்ததாகவும் பிரேமதாசவின் நடவடிக்கையினால் புலிகள் பல்கிப் பெருகியதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 5000 ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாகவும், 300 ஆக உறுப்பினர்களின் எண்ணிக்கை சில மாதங்களில் 6000 மாக உயர்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தினால் பல்வேறு ரகசியங்களை அம்பலப்படுத்த நேரிடும் எனவும் அது கட்சியின் நன்மதிப்பிற்கு பாரியளவில் களங்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் நாட்டில் யுத்தத்தை உண்டு பண்ணும் வகையில் செயற்பட்டு வருவதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளை ஆதரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply