இந்திய அமைதிப் படையினர் தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கருணா, இந்திய அமைதிப் படையினர், இலங்கையில் தங்கியிருந்த 1987- 1990ம் ஆண்டு காலப்பகுதியில் பல தமிழ்ப் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்தனர். அத்துடன் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சுமத்தினார்.
கிழக்கில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களுக்கு ஆதாரங்கள் உள்ளதாக கருணா குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படையை பொறுத்தவரையில் அவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து, இலங்கையின் வடக்கு மீனவர்களுக்கு உதவுவதாக கருணா தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி தம்மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் தாம் அந்தக்கட்சி தொடர்பில் பல தகவல்களை வெளியிட தயங்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
பிரேமதாஸ ஜனாதிபதி பதவியில் இருந்தபோது 350 பேரே விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனர் என்றும், பிரேமதாஸ, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதன் பின்னர் அந்த இயக்கத்தின் உறுப்பினர் தொகை அதிகரித்தது என்றும் கருணா தெரிவித்தார்.
பிரேமதாஸவினால் விடுதலைப் புலிகளுக்கு சுமார் 5000 ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்றும் கருணா கூறினார்.
ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்தும் தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் மேலும் பல ரகசியங்களை வெளியிடப் போவதாக கருணா எச்சரித்தார்.
















