எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள வேட்பாளரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் பொது வேட்பாளர் பட்டியலில் தொடர்ந்து பரிசீலனையில் உள்ளன.
பொது வேட்பாளர் தெரிவு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் எதிர்க்கட்சிகளினால் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது எதிரணி வேட்பாளரை நிறுத்துவதற்கு பொது எதிரணியின் சார்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்தே இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.அந்தவகையில் பொது எதிரணியின் சார்பான வேட்பாளர் வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் அதில் ஆளும் கட்சியிலிருந்து 15 பேரும் எதிர்க்கட்சியிலிருந்து ஐந்து பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரணியின் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள வேட்பாளரை தெரிவு செய்வதற்கான காய்நகர்த்தல்கள் மற்றும் தீவிர முயற்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. எனினும் எதிரணியின் சார்பிலுள்ள கட்சிகளினால் இறுதி முடிவுக்கு வரமுடியாத நிலை காணப்பட்டது. பொது வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய , மாதுளுவாவே சோபித்த தேரர், அர்ஜுண ரணதுங்க ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. ஒரு கட்டத்தில் கரு ஜயசூரிய பொதுவேட்பாளராக போட்டியிடுவார்கள் என பரவலாகக் கூறப்பட்டது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை பொது வேட்பாளராக களமிறக்குவதற்கான முயற்சிகளே ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டன.
















