ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான உறவை உடனடியாக முறித்துக் கொள்ள ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஹெல உறுமயவின் நிபந்தனைகள் தொடர்பில் எழுத்துமூல உத்தரவாதமொன்றை ஆளுங்கட்சி முன்வைத்திருந்தது.
இது தொடர்பாக தமது முடிவை அறிவிப்பதற்கு வரும் திங்கட்கிழமை (17) வரை ஹெல உறுமய கட்சி அவகாசம் கேட்டிருந்தது.
எனினும் சனிக்கிழமை நள்ளிரவு வரை கொழும்பில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் ஆளுங்கட்சியுடனான கூட்டணி உறவை உடனடியாக முறித்துக் கொள்ள ஹெல உறுமய கட்சி முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பு பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குள் ரத்ன தேரர் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது முன்வரைவுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















