அரசாங்கத்திலிருந்து விலகிய ஜாதிக ஹெல உறுமயவின் துணிச்சலான செயல் குறித்து பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் ஜாதிக பவுர அமைப்பு இன்று கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தை நடாத்த அனுமதியளித்திருந்த சகவாழ்வு மன்றம், கோத்தபாயவின் அச்சுறுத்தலையடுத்து பின்வாங்கி, அனுமதி மறுத்துள்ளது.
இக்கூட்டத்தினை நடத்துவதற்கு மருதானை சகவாழ்வு அமைப்பின் மண்டபம் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் கோத்தபாய ராஜபக்சவின் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மீறி கூட்டம் நடத்த அனுமதித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சகவாழ்வு அமைப்பின் முக்கியஸ்தர் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
அதற்கிடையில் ஜாதிக பவுர அமைப்பினர் மற்றும் ஊடகவியலாளர்கள் கூட்டத்திற்காக சகவாழ்வு அமைப்பின் மண்டபத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜாதிக பவுர அமைப்பினர் சகவாழ்வு மன்றத்தின் முன்பாக நடுத்தெருவில் நின்றபடி ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர்.
அதன்போது கருத்துத் தெரிவித்திருந்த ஜாதிக பவுர அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் அளுத்கே,
நாட்டில் தற்போது ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் என்பன அறவே இல்லை. பொதுமக்கள் மீண்டும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களாக மாற வேண்டும். அந்த நிலை ஏற்பட்டால் மட்டுமே இலங்கையில் மீண்டும் ஜனநாயகம் மலரும் என்று தெரிவித்துள்ளார்.
















