வைகோவின் நாக்கை அடக்க பாஜக தொண்டனுக்கு தெரியும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எச்.ராஜா காட்டமாக பேட்டியளித்துள்ளதன் பின்னணியில் புதிய கூட்டணி உதய திட்டம் பற்றிய எரிச்சல் இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. தேர்தலில் மதிமுக அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவை வைகோ விமர்சனம் செய்ய தொடங்கினார். ராஜபக்சவை பிரதமர் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததை கண்டித்தார்.
இதன்பிறகு இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்லும் போதெல்லாம் மத்திய அரசை வைகோ வறுத்தெடுக்க தவறுவதில்லை.
ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவரை மீட்க ராஜபக்சவுடன் தொலைபேசியில் மோடி பேசியதையும், அதன்பிறகு அவர்கள் மன்னிப்பு அளிக்கப்பட்டு தாயகம் திரும்பியதையும் கூட வைகோ விமர்சனம் செய்தார்.
மீனவர்களை காப்பாற்றினால் கூட திட்டுகிறாரே என்ற கோபம் பாஜக வில் உள்ளோருக்கு ஏற்பட்டது.
மீனவர்களை சுட்டுக் கொன்ற போது நடவடிக்கை எடுக்காத காங்கிரசையும் திட்டுகிறார், மீனவர்களை காப்பாற்றிய பாஜக வையும் திட்டுகிறார். இவர் மீனவர்கள், இலங்கை தமிழர் விவகாரத்தை வைத்து வேறு ஏதோ காய் நகர்த்துகிறார் என்ற சந்தேகம் பாஜக வினருக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு வரலாறு மகுடம் சூட்டும் என்று புகழும் வைகோ, மீனவர்களை காப்பாற்றியதற்காக பாஜகவுக்கு நன்றி கூட சொல்லவில்லை என்ற ஆதங்கம் தமிழக பாஜக தலைவர்களிடம் உள்ளது.
பாஜகவை தமிழக மக்களிடம் நல்ல பெயர் வாங்க விட்டுவிடக்கூடாது என்று வைகோ கங்கணம் கட்டிக்கொண்டு அவதூறுகளை பரப்பி வருவதாக சந்தேகிக்கும் பாஜகவினர், அதன் பின்னணியில் வைகோவின் புதிய கூட்டணி திட்டம் இருப்பதையும் கவனிக்க தவறவில்லை.
அதாவது, அடுத்த சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் பாஜகவை வளர்த்துவிடக் கூடாது என்பதற்காக, விஜயகாந்த், கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி, வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வைகோ திட்டமிட்டுள்ளதாக பாஜகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக அல்லாத தனி கூட்டணியை உருவாக்க வைகோ முயன்றுவருகிறார் என்ற தகவல் ஊடகங்களில் கசிந்தன. வைகோவின் இந்த திட்டத்தால் அதிர்ச்சியடைந்துள்ள பாஜக தலைவர்கள் கூட இருந்தே நம்மை குறை சொல்லும் வைகோ, கடைசி நேரத்தில் நம்மை கை கழுவ தயாராகிவிட்டார்.
எனவே நாமே அவரை வெளியேற்றலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்த கோபம்தான் சமீபத்தில் எச்.ராஜா மூலமாக வெளிப்பட்டது.
வைகோ நாவை அடக்கி பேசாவிட்டால் பாஜக தொண்டர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்று எச்.ராஜா எச்சரித்திருப்பது இந்த பின்னணியில்தான் என்று கூறப்படுகிறது.
















